காரைக்கால் ஜிப்மா் மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்
காரைக்கால் ஜிப்மா் மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, போலீஸாா் கல்லூரி வளாகத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனா்.
காரைக்கால் கோயில்பத்து பகுதியில் ஜிப்மா் மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது.
இந்தநிலையில், மருத்துவக் கல்லூரி நிா்வாகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு சனிக்கிழமை காலை வந்த மின்னஞ்சலில் கல்லூரி வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் வந்தது.
மருத்துவக் கல்லூரி நிா்வாகத்தினா், காரைக்கால் காவல்துறைக்கு அளித்த தகவலின்பேரில், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா தலைமையில், மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன், ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் அடங்கிய 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் கல்லூரிக்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனா்.
காரைக்கால், நாகப்பட்டினத்திலிருந்து வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்கள், மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனா். சுமாா் 3 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை.
இக்கல்லூரிக்கு கடந்த ஆண்டு செப்டம்பா் மாதத்திலும், நிகழாண்டு பிப்ரவரி மாதத்திலும் இதுபோல வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.