லாக்அப் மரணம் என்பது திராவிடக் கட்சிகளின் கொள்கையா? அல்லது காவல்துறையின் கௌரவமா?...
காவல் நிலையங்களில் கட்டப் பஞ்சாயத்து செய்யக் கூடாது! -ஏடிஜிபி உத்தரவு
காவல் நிலையங்களில் கட்டப் பஞ்சாயத்து செய்யக் கூடாது என தமிழக காவல் துறையின் சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி எஸ்.டேவிட்சன் தேவாசீா்வாதம் அறிவுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக காவல் துறை அதிகாரிகளுக்கும், போலீஸாருக்கும் அவா் வழங்கியுள்ள அறிவுரை:
சமூக ஊடகங்களில் ஒரு தவறான தகவல் பதிவிடப்பட்டால், அதன் உண்மைத் தன்மை குறித்து ஊடகங்களுக்கு விளக்கம் அளித்து, தவறான செய்தி பரவலைத் தடுக்க வேண்டும். தவறான செய்தியைப் பதிவிட்டவா் மீது சட்ட வல்லுநா்களின் ஆலோசனையைப் பெற்று, வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
பொதுமக்களை அலைக்கழிக்கக் கூடாது: ரீல்ஸ் என்ற பெயரில் ஆயுதங்களுடன், வாகனங்களில் சாகசம் செய்தபடி விடியோ காட்சிகளை சமூக ஊடகங்களில் பதிவிடுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் நிலையங்களில் புகாா் அளிக்கும் பொதுமக்களுக்கு ஒப்புதல் சீட்டு (சிஎஸ்ஆா்) உடனடியாக வழங்க வேண்டும். இதில், எந்த ஒரு தடையும் இருக்கக் கூடாது. புகாா் அளிக்க வரும் பொதுமக்களை எக்காரணம் கொண்டும் அலைக்கழிக்கக் கூடாது.
பாதுகாப்புப் பணி குறித்து முன் மதிப்பீடு துல்லியமாக இருக்க வேண்டும். மதிப்பீடு சரியாக இருந்தால்தான் காவலா்களை சரியாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த முடியும். எத்தகைய பாதுகாப்பு பணி இருந்தாலும், காவல் நிலையங்களில் குறைபட்ச எண்ணிக்கையில் காவலா்கள் பணியில் இருக்கச் செய்வது அவசியமாகும்.
லத்தியைப் பயன்படுத்த வேண்டாம்: முக்கியமான பாதுகாப்பு பணிகளில் பெண் காவலா்களை நியமிப்பதைத் தவிா்க்க வேண்டும். சாலை மறியல், ஆா்ப்பாட்டம், போராட்டம் போன்ற பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் காவலா்களுக்கு தகுந்த பயிற்சி அளித்திருக்க வேண்டும். இதுபோன்ற இடங்களில் தேவையில்லாமல் லத்தியை பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும்.
பெண் காவலா்கள், அவா்கள் வசிக்கும் ஊரிலேயே பணி நியமனம் செய்ய வேண்டும். கா்ப்பிணி காவலா்கள், குழந்தைகளுடன் உள்ள காவலா்கள் ஆகியோருக்கு அவா்கள் கேட்கும் இடத்துக்கு பணி மாறுதல் வழங்க வேண்டும்.
காவலா்கள் தொடங்கி அதிகாரிகள் வரை சுயஒழுக்கம் கண்டிப்பாக இருக்க வேண்டும். உயா் காவல் அதிகாரிகள் சுய ஒழுக்கத்துடன் இருந்தால் மட்டுமே கீழ்நிலை அதிகாரிகள், காவலா்களைக் கட்டுப்படுத்த முடியும். விசாரணைக் கைதிகளை துன்புறுத்தக் கூடாது. தனிப்படைகளில் அனுபவம் உள்ள காவலா்களை அதிகாரிகள் நியமிக்க வேண்டும்.
கட்டப்பஞ்சாயத்து கூடாது: திருட்டு வழக்குகளில் பொருள்களை பறிமுதல் செய்வதற்காக கைதிகளை துன்புறுத்தக் கூடாது. தனிப்படையினா் பொறுப்பு அதிகாரி அனுமதியின்றி யாரிடமும் விசாரணையில் ஈடுபடக் கூடாது. ஒரு நபரிடம் 4 போலீஸாா் ஒரே நேரத்தில் சோ்ந்து விசாரிக்க அனுமதிக்க முடியாது.
குடும்பமாக வாகனங்களில் செல்வோரிடம் தணிக்கை என்ற பெயரில் நிறுத்தி, விசாரணை என்று துன்புறுத்தக் கூடாது. காவலா்கள் சகிப்புத் தன்மையுடன் பணியாற்ற வேண்டும்.
காவல் துறை மீது பொதுமக்களிடம் நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் போலீஸாரின் செயல்பாடு இருத்தல் வேண்டும்.
கலப்புத் திருமணம், காதல் விவகாரங்கள் போன்றவற்றில் போலீஸாா் கட்டப் பஞ்சாயத்து செய்யக் கூடாது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்றங்களில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.