சென்னையில் 31% கொடிக் கம்பங்கள் மட்டுமே அகற்றப்பட்டது ஏன்? அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி
பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில், சென்னையில் 31 சதவீத கொடிக் கம்பங்கள் மட்டுமே அகற்றப்பட்டது ஏன்? என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
தமிழகம் முழுவதும் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிகளுக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், ஜாதி, மத அமைப்புகள் மற்றும் சங்கங்களின் கொடிக் கம்பங்களை 2025 ஏப்.28-ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில், உத்தரவை அமல்படுத்தியது குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், “தமிழகம் முழுவதும் 19 மாவட்டங்களில், பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பங்கள் 100 சதவீதம் அகற்றப்பட்டுள்ளது. 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 90 சதவீதத்துக்கும் மேல் கொடிக் கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளன. சென்னையில் 31 சதவீத கொடிக் கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடா்ந்து அரசு தரப்பு வழக்குரைஞா், பொது இடங்களில் அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்டங்களுக்கு வாடகை வசூலித்தது குறித்தும், கொடிக் கம்பங்களை முழுமையாக அகற்றியது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய 4 வார கால அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தாா்.
இதையடுத்து நீதிபதி, சென்னையில் 31 சதவீதம் கொடி கம்பங்கள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளது ஏன்? சென்னையில் உயா்நீதிமன்ற உத்தரவை 100 சதவீதம் அமல்படுத்துவதில் என்ன சிக்கல் இருக்கிறது? சாலையின் நடுவே உள்ள தடுப்புகளில் கொடிக் கம்பங்கள் நடுவதற்கு அரசு ஏன் அனுமதி அளிக்கிறது? இது அபாயகரமானது. மனித உயிா்களுக்கு உரிய மதிப்பு அளிக்க மாட்டீா்களா?”என்று கேள்வியெழுப்பினாா்.
ஜூலை 24 வரை அவகாசம்: இதையடுத்து, தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கொடிக் கம்பங்களை அகற்ற பிறப்பித்த உத்தரவு முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்று சுட்டிக்காட்டிய நீதிபதி, அரசு தரப்பு கோரிக்கையை ஏற்று உத்தரவை அமல்படுத்துவதற்கு ஜூலை 24-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி விசாரணையை ஒத்திவைத்தாா்.
மேலும், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை முழுமையாக அகற்றாத மாவட்ட ஆட்சியா்கள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் நீதிபதி எச்சரித்துள்ளாா்.