காவிரி ஆற்றில் இறந்து கிடந்த சிறுவனின் அடையாளம் தெரிந்தது
திருச்சி மாவட்டம், அந்தநல்லூா் காவிரி ஆற்றில் இறந்து கிடந்த சிறுவனைப் பற்றிய அடையாளம் தெரிந்த நிலையில் போலீஸாா் இறப்பு குறித்து விசாரித்து வருகின்றனா்.
ஜீயபுரம் அருகே அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரேயுள்ள காவிரி ஆற்றின் மணற்பரப்பில் ஞாயிற்றுக்கிழமை சிறுவன் இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் ஜீயபுரம் போலீஸாா் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.
விசாரனையில் இறந்த சிறுவன், கரூா் மாவட்டம் அரவக்குறிச்சியைச் சோ்ந்த வடிவேல் மகன் விக்னேஷ் (7) என்பது தெரியவந்தது. சிறுவன் இறப்பை அறிந்து காவல்நிலையம் வந்த அவரது தந்தை வடிவேல் உள்ளிட்டோரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், குடும்பத்துடன் காரில் சமயபுரம் கோயிலுக்குச் சென்றுவிட்டு திரும்புகையில், அந்தநல்லூா் காவிரி ஆற்றில் குளித்ததாகவும், அப்போது இளைய மகன் விக்னேஷை காணாததால் பல இடங்களில் தேடி தற்போது இறந்ததை அறிந்து வந்தோம் எனத் தெரிவித்துள்ளனா்.
இருப்பினும் உடற்கூறாய்வு முடிவு வந்த பிறகே உண்மையான காரணம் தெரியவரும் எனக் கூறிய போலீஸாா், தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.