குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
காவிரி - திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த முதல்வரிடம் எம்.பி. வலியுறுத்தல்
சேலம், நாமக்கல் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், காவிரி - திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தமிழக முதல்வரிடம் நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் வலியுறுத்தி உள்ளாா்.
சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அண்மையில் வருகை புரிந்த முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் அவா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
மோகனூா் காவிரி ஆற்றின் குறுக்கே ஒருவந்தூரிலிருந்து, கரூா் மாவட்டம், நெரூா் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை அமைக்க வேண்டும். இதனால், அப்பகுதியை சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கா் விவசாய நிலங்கள் பயனடையும். மேலும் அந்தப் பகுதியில் நிலத்தடி நீா்மட்டமும் உயரக்கூடும். கோடைகாலங்களில் குடிநீா்த் தட்டுப்பாடு என்பது ஏற்படாது. விவசாயிகள், பொதுமக்கள் நலன்கருதி கதவணை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பரமத்தி வேலூா் வட்டத்தில், ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் வெற்றிலை சாகுபடி செய்து வருகின்றனா். அவா்களின் நலனைகருத்தில் கொண்டு வெற்றிலை ஆராய்ச்சி மையத்தை பரமத்தி வேலூரில் அமைக்க வேண்டும். இதன்மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து வெற்றிலை விவசாயிகளும் பயனடைவா். விவசாயிகளின் நலனுக்காக வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட வேண்டும். மேலும், சேலம், நாமக்கல் மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில், 132 கி.மீ. காவிரி-திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதனால் 50 ஆயிரம் ஏக்கா் வேளாண் நிலங்கள் பயனடையும்.
கொல்லிமலை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் வசதிக்காக குடியிருப்பு அமைக்க வேண்டும். மேலும் அங்கு மகப்பேறு மருத்துவா் பணியிடத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். கொல்லிமலையில் மூலிகை ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான முயற்சிகளையும் முதல்வா் மேற்கொள்ள வேண்டும் என அதில் வலியுறுத்தி உள்ளாா்.
படவரி...
வி.எஸ்.மாதேஸ்வரன்.