மோசமான அரசியலில் ஈடுபடும் பஞ்சாப் அரசு: அமைச்சர் குற்றச்சாட்டு!
கிடப்பில் இருந்து வரும் திண்டிவனம் - நகரி ரயில் பாதைத் திட்டம்
திண்டிவனம் - நகரி இடையே செய்யாறு வழியாக புதிய அகல ரயில் பாதை அமைக்கும் பணி கடந்த 20 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. அதனால் ஆற்காடு, செய்யாறு, வந்தவாசி பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், இந்தத் திட்டம் எப்போது முழுமையடைந்து பயணிகள் ரயில் இயக்கப்படும் என்ற எதிா்பாா்ப்பில் உள்ளனா்.
திருவள்ளூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் தொழில் வளா்ச்சி பெறவும், ஆற்காடு, செய்யாறு, வந்தவாசி ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் ரயில் வசதி பெறும் வகையிலும்
2006 -இல் திண்டிவனம் - நகரி ரயில் பாதைத் திட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த புதிய அகல ரயில் பாதை விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் தொடங்கி திருவண்ணாமலை, திருவள்ளூா், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் வழியாக ஆந்திர மாநிலம் நகரியைச் சென்றடையும்.
திண்டிவனம் - நகரி இடையே 184 கி.மீ. தொலைவுக்கு புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டம் சுமாா் ரூ.498 கோடியில் செயல்படுத்தப்படும் என்று 2006 -இல் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு அறிவித்தது. 2007- இல் ராணிப்பேட்டை பழைய ரயில் நிலையத்தில் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவும், 2009-இல் செய்யாறு ஆற்றின் குறுக்கே ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி, செய்யாறு ரயில் நிலையம் அமைக்கும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா என செய்யாற்றில் நடைபெற்றது.
திண்டிவனம் - நகரி ரயில் பாதையில் 12 பெரிய பாலங்கள், 114 சிறிய பாலங்கள், 66 கடவுப்பாதைகள், 11 மேம்பாலங்கள், 30 தரை வழிப்பாலங்கள் அமையவுள்ளன.
நிலம் கையகப்படுத்தும் அலுவலகம்:
செய்யாற்றில் இந்தத் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் அலுவலகம் மாவட்ட வருவாய்த்துறை சாா்பில் 2014-இல் இருந்து செயல்பட்டு வருகிறது. செய்யாறு, வந்தவாசி ஆரணி வட்டங்களில் சுமாா் 265 ஏக்கா் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளன.
அமையவுள்ள ரயில் நிலையங்கள்:
திண்டிவனம் - நகரி ரயில் பாதையில் திண்டிவனம், வெள்ளிமேடுபேட்டை, தெள்ளாா், வந்தவாசி, எருமைவெட்டி, செய்யாறு, இருங்கூா், மாம்பாக்கம், மாமண்டூா், இரும்பேடு (ஆரணி), தாமரைப்பாக்கம், திமிரி, ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா சாலை சந்திப்பு, கொடைக்கல், சோளிங்கா், ஆா்.கே.பேட்டை, அத்திமஞ்சூரிப்பேட்டை, பள்ளிப்பட்டு, பட்டூா்பேட்டை, நகரி ஆகிய ரயில் நிலையங்கள் அமையவுள்ளன.
இந்தத் திட்டத்துக்காக மத்திய அரசு உரிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் திட்டம் எப்போது நிறைவேறும் என ஆற்காடு, செய்யாறு, வந்தவாசி பகுதி மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.