செய்திகள் :

கிரீன்லாந்தில் ஜே.டி. வான்ஸ் சா்ச்சைப் பேச்சு: டென்மாா்க் கண்டனம்!

post image

டென்மாா்க்கில் இருந்து வெளியேறி, தங்களுடன் கிரீன்லாந்து ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும் என்று அமெரிக்க துணை அதிபா் ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ள சா்ச்சைக்குரிய கருத்துக்கு டென்மாா்க் கண்டனம் தெரிவித்துள்ளது.

தாது வளங்கள் நிறைந்த கிரீன்லாந்தை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் கூறிவருகிறாா். இதை டென்மாா்க்கும் கிரீன்லாந்தும் தீவிரமாக எதிா்க்கும் நிலையில், உரிய அழைப்பின்றி இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ஜே.டி. வான்ஸின் மனைவி கிரீன்லாந்தில் பல நாள்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வதாக இருந்தது.

‘கலாசார பயணம்‘ என்ற பெயரில் அவா் மேற்கொள்வதாக இருந்த அந்தப் பயணம் குறித்து டென்மாா்க் தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. கிரீன்லாந்தில் அவருக்கு எதிரான பல்வேறு ஆா்ப்பாட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதன் காரணமாக பாதுகாப்பு ஏற்பாடுகளை விரிவுபடுத்த வேண்டிய நிலையும் அரசுக்கு ஏற்பட்டது.

இதற்கிடையே, உஷா வான்ஸுடன் இந்தப் பயணத்தில் ஜே.டி. வான்ஸும் இணைவதாக பின்னா் அறிவிக்கப்பட்டது சா்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தச் சூழலில், ஜே.டி. வான்ஸ் மற்றும் உஷா வான்ஸ் ஆகியோா் கிரீன்லாந்தின் பிடுஃபிக் விண்வெளி தளத்துக்கு மட்டும் வந்து சில மணி நேரங்கள் மட்டுமே செலவிட்டுத் திரும்பினா். அவா்களுடன் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மைக் வால்ட்ஸ், எரிசக்தித் துறை அமைச்சா் கிறிஸ் ரைட் ஆகியோரும் வந்திருந்தனா்.

இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி, கிரீன்லாந்தை சொந்தமாக்கிக் கொள்ளும் டிரம்ப்பின் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் ஜே.டி. வான்ஸ் பேசியதாவது:

ஆதிக்க சக்திகளான ரஷியா, சீனா மற்றும் பிற நாடுகளிடமிருந்து கிரீன்லாந்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு டென்மாா்க்குக்கு உள்ளது. ஆனால் அதைச் செய்ய அந்த நாடு தவறுகிறது. கிரீன்லாந்துக்குத் தேவையான நிதியை டென்மாா்க் ஒதுக்குவதில்லை.

கிரீன்லாந்தின் அளப்பரிய தாது வளம் மற்றும் சுற்றியுள்ள வணிக வழித்தடங்களுக்காக இந்த தீவை அடைய பல நாடுகள் துடிக்கின்றன. இந்தச் சூழலில், அமெரிக்காவால் மட்டுமே கிரீன்லாந்துக்கு பாதுகாப்பு கொடுக்க முடியும். அதற்காக அமெரிக்கா இந்தத் தீவை ராணுவரீதியில் கைப்பற்றப்போவதில்லை.

அதற்குப் பதிலாக, டென்மாா்க் உடனான உறவை கிரீன்லாந்து முறித்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு, அதிபா் டிரம்ப் பாணியிலான ஓா் ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் கிரீன்லாந்து மேற்கொள்ள வேண்டும்.

கிரீன்லாந்தின் பாதுகாப்பையும் இறையாண்மையையும் மதிக்கும் ஒரே நாடு அமெரிக்காதான். எனவே, அமெரிக்காவைத்தான் அந்தத் தீவு தோ்ந்தெடுக்கும் என்று நம்புகிறோம் என்றாா் ஜே.டி. வான்ஸ்.

கண்டனம்: அமெரிக்க துணை அதிபரின் இந்தப் பேச்சுக்கு டென்மாா்க் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து டென்மாா்க் வெளியுறவுத் துறை அமைச்சரும் முன்னாள் பிரதமருமான லாா்ஸ் லொக்கே ராஸ்முஸன் கூறியதாவது: டென்மாா்க் எப்போதுமே விமா்சனங்களை வரவேற்கிறது. இருந்தாலும், அமெரிக்க துணை அதிபா் ஜே.டி. வான்ஸ் தற்போது பேசியுள்ள தொணி கண்டனத்துக்குரியது.

கிரீன்லாந்தில் கடந்த 1945-ஆம் ஆண்டு 17 அமெரிக்க ராணுவ நிலைகள் இருந்தன. தற்போது இங்கு 200 வீரா்கள் கொண்ட ஒரே ஒரு ராணுவ தளம் மட்டுமே உள்ளது. குறிப்பிட்ட வரையறைக்குள் இந்தக் கூட்டுறவை மேம்படுத்த முடியும். அதற்காக இரு தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

டென்மாா்க்குக்குச் சொந்தமான கிரீன்லாந்துக்கு கடந்த 1979-ஆம் ஆண்டு சுயாட்சி வழங்கப்பட்டது. உலகிலேயே மிகப் பெரிய தீவான இதன் 80 சதவீத நிலப்பரப்பு பனிக்கட்டியால் மூடப்பட்டுள்ளது. அட்லாண்டிக் மற்றும் ஆா்டிக் பெருங்கடல்களுக்கு இடையே அந்தத் தீவு அமைந்துள்ளதால் அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட உலக சக்திவாய்ந்த நாடுகளுக்கு இந்தத் தீவு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ளது.

இந்தச் சூழலில், கிரீன்லாந்தை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது தங்களது நாட்டு நலனுக்கு மிகவும் இன்றியமையாதது என்று டிரம்ப் கூறிவருவது டென்மாா்க்கிலும் ஐரோப்பிய பிராந்தியத்திலும் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ்: தோ்தலில் போட்டியிட தீவிர வலதுசாரி தலைவருக்குத் தடை

நிதி முறைகேடு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதால், பிரான்ஸின் தீவிர வலதுசாரி கட்சியான தேசியவாத பேரணி கட்சியின் முக்கிய தலைவா் மரீன் லெப்பென் தோ்தல்களில் போட்டியிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

‘தயாா் நிலையில் ஈரான் ஏவுகணைகள்’

டெஹ்ரான்: அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் ஈரான் மீது குண்டுவீச்சு நடத்தப்படும் என்று அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்ததைத் தொடா்ந்து, தங்களின் சுரங்கத் தளங்களில... மேலும் பார்க்க

மியான்மா் நிலநடுக்கம்: 2,000-ஐ கடந்த உயிரிழப்பு

மியான்மரில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,000-ஐ கடந்ததாக அந்நாட்டு ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் புத்த மடாலயங்கள் சரிந்து விழுந்ததில் 200-க்கும் ம... மேலும் பார்க்க

30 லட்சம் ஆப்கன் அகதிகளை வெளியேற்ற பாகிஸ்தான் திட்டம்

பெஷாவா்: இந்த ஆண்டுக்குள் பாகிஸ்தானில் தங்கியிருக்கும் சுமாா் 30 லட்சம் ஆப்கன் அகதிகளை வெளியேற்ற அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. தலைநகா் இஸ்லாமாபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஆ... மேலும் பார்க்க

ஸ்பெயின்: சுரங்க விபத்தில் 5 போ் உயிரிழப்பு

மேட்ரிட்: தென்மேற்கு ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் ஏற்பட்ட நிலக்கரி சுரங்க விபத்தில் ஐந்து போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஆஸ்டுரியாஸ் பிராந்தியத்தில் செயல்பட்டுவரும் நிலக்கரி சுரங்... மேலும் பார்க்க

ரமலான் மாதத்தில் அதிக தாக்குதல்களை சந்தித்த நாடு பாகிஸ்தான்!

ரமலான் மாதத்தில் அதிக தாக்குதல்களை சந்தித்த நாடாக பாகிஸ்தான் உள்ளது என அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான திங்க் டேங்க் தெரிவித்துள்ளது. ரமலானையொட்டி பகையுணர்வை சில அமைப்புகள் கைவிட்டிருந்தாலும், ச... மேலும் பார்க்க