Kamal Haasan: "கமல் சாரின் குரல் மாநிலங்களவையில் ஓங்கி ஒலிக்கட்டும்" - வாழ்த்திய...
குடிபோதையில் தகராறு; பணம் தர மறுத்த தந்தையை கொடூரமாக கொலை செய்த இளைஞர்
தென்காசி மாவட்டம், குருவிகுளம் அருகேயுள்ள மலையான்குளம் கிராமத்தைச் சேர்ந்த செல்லையா. இவர், அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி பழனியம்மாள். இவர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
இவர்களுக்கு கந்தசாமி, கணேசன், முருகையா ஆகிய மூன்று மகன்களும் சண்முகத்தாய் என்ற மகளும் உள்ளனர்.

அனைவருக்கும் திருமணமாகி உள்ளூரிலேயே வசித்து வருகின்றனர். மூத்த மகனான கந்தசாமியுடன் செல்லையா வசித்து வந்தார்.
கடந்த ஆண்டு செல்லையா, அவருக்குச் சொந்தமான நெல் வயலை விற்று தனது மூன்று மகன்கள் மற்றும் மகளுக்கு சரிசமமாக பிரித்துக் கொடுத்தார். அவருக்கு என ரூ. 1.25 லட்சம் பணத்தை வைத்திருந்தார்.
இந்த நிலையில், அவரது இரண்டாவது மகனான கணேசன் தனக்கு கடன் பிரச்னை இருப்பதால் அந்த பணத்தை தரும்படி கேட்டுள்ளார்.
ஆனால், செல்லையா தர மறுத்தாராம். இதனையடுத்து அந்த பணத்தை கேட்டு தினமும் கணேசன் மது போதையில் செல்லையாவிடம் தகராறு செய்து வந்துள்ளாராம்.
இந்த நிலையில், வழக்கம் போல் செல்லையாவிடம் பணம் கேட்கவே அவரும் மறுத்துள்ளார். மது போதையில் இருந்த கணேசன், செல்லையாவை அரிவாளால் கொடூரமாக வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டார்.

அக்கம் பக்கத்தினர் செல்லையாவை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், பலத்த வெட்டுக் காயங்கள் இருந்ததால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் செல்லையா.
தப்பியோடிய கணேசனை குருவிகுளம் காவல்நிலைய போலீஸார் கைது செய்தனர். பணத்திற்காக மதுபோதையில் பெற்ற தந்தையையை மகனே கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.