நட்சத்திர பலன்கள்: மே 30 முதல் ஜூன் 5 வரை #VikatanPhotoCards
திருவொற்றியூரில் புதிய சூரை மீன்பிடி துறைமுகம்: முதல்வர் திறந்து வைத்தார்!
சென்னை மாவட்டம், திருவொற்றியூரில் 272 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய சூரை மீன்பிடி துறைமுகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இம்மீன்பிடித் துறைமுகம் இந்தியாவிலேயே முதன் முதலாக சூரை மீன் பிடிப்பிற்கென பிரத்தியேகமாக கட்டப்பட்டதாகும். இத்துறைமுகத்தில், தெற்கு மற்றும் வடக்கு அலை தடுப்புச் சுவர்கள், படகு அணையும் சுவர், படகு அணையும் தளம், மீன் ஏலக்கூடங்கள், மீன் வலைப்பின்னும் கூடம், நிர்வாகக் கட்டடம், மீனவர் தங்கும் அறை, வானொலித் தகவல் தொடர்பு மையம், உணவகம், வலை பாதுகாப்பு கூடம், சுகாதார வளாகம், மீனவர் ஓய்வு அறை, இழுவை அறை, படகு பழுது பார்க்கும் இடம், மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி, மழைநீர் வடிகால் கொண்ட சாலை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், மீனவர்கள் ஆழ்கடலில் இருந்து சுகாதாரமான முறையில் தாங்கள் பிடித்து வரும் சூரை மீன்களை தரம் குறையாமல் உடனடியாக ஏற்றுமதியாளர்களுக்கு விற்பனை செய்து, கூடுதல் விலையை பெற்றிட இயலும்.
இதனால் மீனவர்களின் பொருளாதார நிலை உயர வழிவகுக்கும். இம்மீன்பிடித் துறைமுகம் ஆண்டிற்கு சுமார் 70,000 டன்கள் அளவிற்கு மீன்களை கையாளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், இம்மீன்பிடித் துறைமுகத்தினை சுற்றியுள்ள 12 மீனவ கிராமங்களைச் சார்ந்த சுமார் 6,250 மீனவர்கள் மற்றும் மீன்பிடிப்பு சார்ந்த தொழிலில் உள்ளவர்கள் நேரடியாக பயன் பெறுவர்.
முதல்வர் ஸ்டாலின் இன்று (மே 28) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் சென்னை மாவட்டம், திருவொற்றியூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 272 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள திருவொற்றியூர் புதிய சூரை மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட 426 கோடியே 13 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடித் துறைமுகங்கள், மீன் இறங்குதளங்கள் மற்றும் மீன் விதைப் பண்ணை என 13 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் மற்றும் ரோச்மாநகர் மீனவ கிராமங்களில்மொத்தம் 170கோடிரூபாய்மதிப்பீட்டில் மீன் இறங்குதளங்களை மேம்படுத்தும்பணிகளுக்குஅடிக்கல்நாட்டினார்.
மேலும்,தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வள கூட்டுறவு இணையத்தின் மூலம் மகளிர் கூட்டுக் குழுக்களுக்கு நுண்கடன் வழங்கும் அலைகள் திட்டத்தை தொடங்கி வைத்து, 2,290 மீனவ பயனாளி பெருமக்களுக்கு 10 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதையும் படிக்க: மாநிலங்களவைத் தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு! கமலுக்கு?