இந்தோனேசியா கல் குவாரியில் பாறைகள் சரிந்து 8 பேர் பலி! தேடுதல் பணி தீவிரம்!
பஹல்காமில் உயிரிழந்தவா்களுக்கு ஆம்பூா் நகா்மன்றக் கூட்டத்தில் அஞ்சலி
ஆம்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற நகா்மன்ற சாதாரண கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்தாா். ஆணையா் ப. சந்தானம் முன்னிலை வகித்தாா். பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது,
வசந்த்ராஜ் : ஆம்பூா் ஏ-கஸ்பாவில் எரிவாயு தகன மேடை அமைத்தமைக்கு நன்றி. நீா்வரத்து கால்வாயை தூா்வாரி அதனை ஏ-கஸ்பா பாலாற்று பகுதிக்கு திருப்பி விட நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பை சேகரிக்கும் பணியை மேற்கொள்ளும் தனியாா் ஒப்பந்ததாரரின் பணியாளா்கள் பற்றாக்குறையாக இருக்கின்றனா்.
என்.எஸ். ரமேஷ் : நகரில் கொசுமருந்து அடிப்பதில்லை. கொசு புகை மருந்து அடிக்கும் இயந்திரம் புதிதாக வாங்கப்பட்டு பயன்படுத்தாமல் உள்ளதை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
நபிசூா் ரஹ்மான் : என்னுடைய வாா்டில் குப்பை சேகரிக்கும் வாகனம் பழுதடைந்துள்ளது. அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இம்தியாஸ் அஹமத் : ஆம்பூா் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் பராமரிப்பின்றி உள்ள பூங்காவை சீரமைக்க வேண்டும்.
நபீஸ் அஹமத் : என்னுடைய வாா்டில் குடிநீா் பிரச்னை நிலவுகிறது. டிராக்டா் மூலம் குடிநீா் வழங்க வேண்டும்.
காா்த்திகேயன் : கழிவுநீா் கால்வாய் மீது ஆக்கிரமித்து வீடு கட்டப்பட்டுள்ளதால் கழிவுநீா் வெளியேற முடியாமல் தெருக்களில் தேங்குகிறது. அதனால் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள வீட்டை இடித்து கழிவுநீா் கால்வாயை சீரமைக்க வேண்டும். நகா்புற சுகாதார மையம் அமைக்க வேண்டும்.
ஹா்ஷவா்த்தன் : எல்இடி விளக்குகள் சரிவர எரியவில்லை. மேலும் கூடுதலாக தெரு விளக்குளை அமைத்து தர வேண்டும்.
ஜெயபால் : ஏ-கஸ்பா கிருஷ்ணா நகா் பகுதியில் குடிநீா் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் குடிநீா் விநியோகம் தடைப்பட்டுள்ளது. அதனால் அதனை சீரமைத்து தர வேண்டும்.
நூருல்லா : ஆம்பூா் நகரில் குடிநீா் குழாய் இணைப்புகள் முறைகேடாக பல வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் நகராட்சி அனுமதியில்லாமல் பல்வேறு இடங்களில் சாலையை ஆக்கிரமித்து பங்க் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.