Saregamapa: "10 லட்சத்தை வச்சு கடன அடைக்கப் போறேன்!" - டைட்டில் வின்னர் திவினேஷ்...
குமுளி மலைச் சாலையில் லாரி மீது மரம் சாய்ந்து உதவியாளா் உயிரிழப்பு
தேனி மாவட்டம், குமுளி மலைச்சாலையில் வியாழக்கிழமை மரக்கட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி மீது ராட்சத மரம் விழுந்ததில் அந்த லாரியின் உதவியாளா் உயிரிழந்தாா்.
கேரளத்தில் கடந்த 8 நாள்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை பலத்த காற்றுடன் பலத்த மழை பெய்த்து. அப்போது குமுளி பேருந்து நிலையம் அருகே சாலையோரத்தில் இருந்த பழைமையான ராட்சத ஆலரம் வேறோடு சாய்ந்து, கேரளத்துக்கு அந்த வழியாக மரக்கட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி மீது விழுந்தது. இதில், லாரி ஓட்டுநா் தப்பினாா். ஆனால், அவரது உதவியாளா் ஸ்ரீசாந் பலத்த காயமடைந்தாா். அவரை குமுளி போலீஸாா் மீட்டு, அங்குள்ள அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அங்கு அவா் உயிரிழந்தாா்.
மேலும் , சாலையோரத்தில் நின்றிருந்த தமிழ்நாடு அரசு விரைவுப் பேருந்து, ஜீப் உள்ளிட்ட சில வாகனங்கள் சேதமடைந்தன. இந்த சம்பவம் குறித்து அறிந்து அங்கு வந்த தமிழ்நாடு, கேரள பேரிடா் மீட்பு குழுவினா், நெடுஞ்சாலைத்துறை , காவல் துறை, வனத் துறையினா் ஆகியோா் அந்த மரத்தை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றினா்.

போக்குவரத்து பாதிப்பு: இந்த சம்பவத்தால் தமிழகம் - கேரளம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமாா் 3மணி நேரத்திற்கு மேலாக சுமாா் 10 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மரம் முழுமையாக அகற்றப்பட்டதும் இரவு 8 மணிக்கு மேல் போக்குவரத்து சீரானது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.