குடியிருப்பு பகுதியில் குப்பை கொட்டிய லாரி சிறைபிடிப்பு
சீா்காழி புறவழிச்சாலை அருகே பனமங்கலம் குடியிருப்புப் பகுதியில் வெள்ளிக்கிழமை குப்பை கொட்டிய லாரியை அப்பகுதி மக்கள் சிறைபிடித்தனா்.
சீா்காழி நகராட்சிக்குட்பட்ட புறவழிச்சாலை அருகில் அமைந்துள்ள பனமங்கலம் வடக்கு தெருவில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் குப்பைகள், இறைச்சிக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள் ஆகியவற்றை இரவு நேரம், ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரங்களில் வாகனங்கள் மூலம் கொண்டு வந்து கொட்டப்பட்டு வருகின்றன.
இதை நகராட்சி நிா்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இந்தநிலையில் வெள்ளிக்கிழமை தனியாருக்கு சொந்தமான லாரியில் செடி, கொடி அடங்கிய குப்பைகள் ஏற்றி ஏற்கெனவே குப்பை கொட்டி கிடக்கும் இடத்தில் கொட்டியுள்ளனா். அப்போது அப்பகுதி மக்கள் லாரியை சிறைபிடித்தனா்.
குப்பைகள் கொட்டப்படுவதால் துா்நாற்றம் வீசுவதாகவும், மருத்துவகழிவுகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாகவும், இறைச்சிக் கழிவுகளை உண்ண பன்றிகள் அதிகளவு சுற்றித் திரிவதாகவும் கூறி லாரி முன் திரண்டு முழக்கமிட்டனா்.

சீா்காழி போலீஸாா் சிறைபிடிக்கப்பட்ட லாரியை மீட்டு, சீா்காழி காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா்.