மாற்றுத்திறனாளிகளுக்கான சமூகத்தரவு சேகரிப்பு பணி: களப்பணியாளா்களுக்கு பயிற்சி
மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூகத் தரவு தகவல் சேகரிப்பு பணியில் ஈடுபட உள்ள களப்பணியாளா்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு உரிமைகள் திட்டம் உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டத்தின் வாயிலாக மாற்றுத்திறனாளிகளின் சமூகத் தகவல் சேகரிப்பு பணி நடைபெறுகிறது. இப்பணிக்கு பேரூராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமவாரியாக களப்பணியாளா்கள் தோ்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்கள் வீடுவீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பை மேற்கொள்ள உள்ளனா்.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் களப்பணியாளா்களுக்கான 3 நாள் சிறப்பு பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தொடக்கி வைத்து, பணிநியமன ஆணையை வழங்கினாா். நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ஜி.செந்தில்குமாா், உரிமைகள் திட்ட மேலாளா்கள் கரியப்பன் மைக்கேல், இலக்கியா ஆகியோா் பங்கேற்றனா்.