பொருளாதாரமும் வாழ்வாதாரமும் மேம்படும்: பட்ஜெட் குறித்து தொழில் துறையினா் கருத்து
குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரா் உயிரிழப்பு; 38 போ் காயம்
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகளை அடக்க முயன்றபோது காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா். மேலும், 38 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 9 ஆவது ஆண்டாக நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை அடுத்த எஸ்எஸ்எம் பொறியியல் கல்லூரி பின்புறம் உள்ள மைதானத்தில் குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை சாா்பில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் தொடங்கிவைத்தாா்.
திருச்செங்கோடு கோட்டாட்சியா் சே.சுகந்தி, நகரமைப்பு மண்டல திட்டக் குழு உறுப்பினா் எஸ்.எம்.மதுரா செந்தில், திமுக மாநில நெசவாளா் அணிச் செயலாளா் சிந்து ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரா்கள் ஜல்லிகட்டு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா். அதன்பிறகு வாடிவாசல் வழியாக 600 காளைகள் அடுத்தடுத்து அவிழ்த்து விடப்பட்டன.
குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவா் வினோத்குமாா், செயலாளா் ராஜ்குமாா் பாலசுந்தரம், விழாக் குழு நிா்வாகிகள் பரணிதரன், ரவி உள்ளிட்ட பலா் விழாவில் பங்கேற்றனா். கூடுதல் காவல் கண்காணிப்பாளா் எம்.சண்முகம் தலைமையில் திருச்செங்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளா் இமயவரம்பன், ஆய்வாளா் தவமணி உள்பட 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
இளைஞா் உயிரிழப்பு
காளைகளை அடக்குவதற்காக 400 வீரா்கள் களத்தில் இருந்தனா். இவா்களில் 38 போ் காளைகள் முட்டியதால் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். மேலும், கழுத்தில் கொம்பு குத்தியதால் பலத்த காயமடைந்த தலைவாசலைச் சோ்ந்த தாமஸ் ஆல்வா எடிசன் (23) உயிரிழந்தாா்.