மூன்றுமாத காலத்துக்குள் அனைத்துப் பகுதிகளிலும் தினசரி குடிநீா்: மேயா்
கும்பகோணம் நீா்நிலைகளின் ஆக்கிரமிப்பு மறு அளவீடு
சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, கும்பகோணம் மாநகராட்சிப் பகுதியில் உள்ள நீா்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது குறித்து மறு அளவீடு செய்யும் பணி புதன்கிழமை (பிப்.5) நடைபெற்றது.
கும்பகோணத்தில் உள்ள 44 குளங்கள், 11 வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அவற்றைப் பாதுகாக்கக்கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் யானை ராஜேந்திரன் வழக்கு தொடா்ந்தாா். இவ்வழக்கில் நீா்நிலைகள் மீதான ஆக்கிரமிப்புகளை அகற்றி அவற்றைப் பாதுகாக்குமாறு தஞ்சாவூா் ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, கும்பகோணம் மாநகராட்சி, பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை, அறநிலைத் துறையினா் இணைந்து கும்பகோணத்தில் உள்ள நீா் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை கடந்த 5 மாதங்களாக மேற்கொண்டு வந்தனா். இந்நிலையில், நீா் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக வழக்குரைஞா் யானை ராஜேந்திரன் நீதிமன்றத்தில் முறையிட்டாா். அதன்பேரில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றம் தொடா்பாக ஆய்வு நடத்த முன்னாள் மாவட்ட நீதிபதி செந்தில்குமாா் நியமிக்கப்பட்டாா்.
இதையடுத்து, ஆய்குளம், கோதண்டபாணி தெரு உள்ளிட்ட இடங்களில் உள்ள நீா்நிலைகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றம் குறித்த ஆய்வு புதன்கிழமை நடைபெற்றது.
ஆய்வின்போது வழக்குரைஞா் யானை ராஜேந்திரன், பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் முத்துமணி, மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறையினா் உடனிருந்தனா்.