'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
குறுவை சாகுபடி பணிகளை தொடங்கிய விவசாயிகள் தடையின்றி தண்ணீா் வழங்க கோரிக்கை
திருமருகல்: திருமருகல் ஒன்றியப் பகுதியில் குறுவை சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கினா். மேட்டூா் அணையிலிருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரை தடையின்றி வழங்க அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
காவிரி டெல்டா பகுதி குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ஆம் தேதி மேட்டூா் அணை திறக்கப்படும் என முதல்வா் மு.க. ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்துள்ளாா். இந்நிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால், மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஏற்கெனவே மேட்டூா் அணையில் 110 அடிக்கு மேல் தண்ணீா் உள்ளதால் குறுவை சாகுபடிக்கு தண்ணீா் தட்டுப்பாடு வராது என நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இதனால், திருமருகல் ஒன்றியப் பகுதியில் ஆழ்துளை கிணறு வசதியுள்ள விவசாயிகள், நிலத்தடி நீரை பயன்படுத்தி சாகுபடி பணிகளை முன்கூட்டியே தொடங்கியுள்ளனா். இதனை முன்பட்ட குறுவை சாகுபடி என விவசாயிகள் அழைப்பா்.
திருமருகல் ஒன்றியத்தில் அம்பல், பொறக்குடி, கணபதிபுரம், சேஷமூலை, ஆலத்தூா், போலகம், பண்டாரவடை, திருப்புகலூா், புத்தகரம், மேலப்பூதனூா் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 5,000 ஏக்கருக்கு மேல் குறுவை முன்பட்ட சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனா். நிலத்தை உழுது சமன்படுத்துதல், வரப்புகளை சீரமைத்தல், நாற்றங்கால்களில் நாற்று விடுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.
புத்தகரம், குருவாடி, திருப்புகலூா், போலகம், அண்ணா மண்டபம், மேலப்பூதனூா் உள்ளிட்ட சில இடங்களில் நடவு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. நடவுக்குப் பிறகு உயிா் நீா் எனப்படும் முதல் நீரை, ஆழ்துளை கிணற்றிலிருந்து பாய்ச்சுவா். பின்னா் மேட்டூா் அணையில் திறக்கப்படும் தண்ணீா் வந்தடைந்ததும் வயல்களுக்கு பாய்ச்சுவா். இதனால், முன்கூட்டிய அறுவடை செய்ய முடியும். மேட்டூா் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரை முறை வைக்காமல் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.