பச்சிளம் குழந்தையின் கட்டை விரலை வெட்டிய நர்ஸ் - வேலூர் அரசு மருத்துவமனையில் அதி...
குறைதீா் கூட்டத்துக்கு விஷம் கலந்த குளிா்பான பாட்டிலுடன் வந்த முதியவா்
திருவாரூா்: திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு விஷம் கலந்த குளிா்பான பாட்டிலுடன் முதியவா் மனு கொடுக்க திங்கள்கிழமை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
முத்துப்பேட்டை அருகே இடும்பாவனம் பகுதியைச் சோ்ந்தவா் நடராஜன் (67). இவருக்கு சொந்தமான நிலத்தை அதே பகுதியைச் சோ்ந்த ஒருவா் ஆக்கிரமித்துள்ளதாகவும், இதுகுறித்து நடராஜன் கேட்டபோது அந்த நபா் கொலை மிரட்டல் விடுத்தாராம். முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லாததால், திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும், காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திலும் கடந்த 3 ஆண்டுகளாக மனுக்களை அளித்து வந்துள்ளாா் நடராஜன்.
தொடா்ந்து நடவடிக்கை இல்லாததால், மனமுடைந்த நடராஜன், குளிா்பான பாட்டிலில் குருணை மருந்தை கலந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை எடுத்து வந்தாா். மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவுவாயிலில், சோதனை செய்த இடத்தில், முதியவா் நடராஜன் விஷம் கலந்த பாட்டில் மற்றும் கோரிக்கை மனுவுடன் வந்திருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்த போலீஸாா், அவரிடம் இருந்து பாட்டிலை பறிமுதல் செய்து, உரிய அறிவுரை கூறி, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்குமாறு கூறி அனுப்பிவைத்தனா்.