சட்டப்படிதான் இந்தியர்களின் கை,கால்களில் விலங்கு: அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்
கை, கால்களில் விலங்கிட்டனர்: அமெரிக்காவிலிருந்து வந்த இந்தியர்கள் தகவல்
புது தில்லி: அமெரிக்காவிலிருந்து அழைத்து வந்த போது, கை மற்றும் கால்களில் விலங்கு போட்டிருந்தனர் என்று இந்தியர்கள் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவிலிருந்து தாயகம் திரும்பிய பலரும், தங்களது கை, கால்களில் விலங்கிடப்பட்டிருந்ததாகக் கூறியிருக்கிறார்கள். இந்தியா திரும்பியபோது, எங்களின் கை மற்றும் கால்களில் விலங்கிடப்பட்டு இருந்ததாகவும், பயணம் முழுவதும் சங்கிலியால் பூட்டப்பட்டிருந்தோம். விமானம் அமிர்தசரஸில் தரையிறங்கிய பிறகுதான் எங்கள் கால்களில் இருந்த சங்கிலி அகற்றப்பட்டது என்றும் பலரும் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அமெரிக்காவிலிருக்கும் வேறொரு முகாமுக்குத்தான் அழைத்துச் செல்லப்படுவோம் என்று நினைத்திருந்ததாகவும், செய்திகள் மூலமாகத்தான் தாங்கள் இந்தியா அழைத்து வரப்படுவதையே அறிந்துகொண்டோம் என்றும் சிலர் கூறியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாட்டுக்குச் சென்று சம்பாதித்து, குடும்பத்துக்கு பணம் அனுப்பலாம் என்றுதான் எல்லோரும் பல லட்சம் செலவழித்து அமெரிக்கா சென்றதாகவும், ஆனால், தற்போது கடன்காரர்களாக திரும்ப வந்திருப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஆனால், இந்தியர்களுக்கு கைவிலங்கு இட்டதாக வந்த தகவல்களை மத்திய அரசின் பத்திரிகை தகவல் மையம் மறுத்துள்ளது. அது தொடர்பான புகைப்படங்கள் போலியானது என்றும் கூறியிருந்தது. இந்த புகைப்படங்கள் அகதிகளை குவாத்தமாலா பகுதிக்கு நாடு கடத்தும்போது எடுத்தப் புகைப்படங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்தியர்களே தங்கள் கை, கால்களில் விலங்கிடப்பட்டதாகக் கூறியிருப்பதாக வரும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதற்காக நாடு கடத்தப்பட்ட 104 இந்தியர்கள், அந்நாட்டு ராணுவ விமானம் மூலம் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிருதசரஸ் சர்வதேச விமான நிலயைத்துக்கு வந்தடைந்தனர்.
இந்த விவகாரத்தில், இந்தியர்கள் கைவிலங்கு போடப்பட்டு அவமதிக்கப்படும் படங்கள் நேற்று சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசின் மௌனப் போக்கை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவர் பவன் கேரா, வெளியிட்ட எக்ஸ் பதிவில், இதுபோன்று 2013ஆம் ஆண்டு ஒரு சம்பவம் நடந்த போது, இந்திய அரசு சார்பில் கடும் எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டதாகவும், அமெரிக்க தூதரகத்துக்கு வழங்கப்பட்ட பல சலுகைகளை இந்தியா திரும்பப் பெற்றது என்றும் தெரிவித்திருந்தார்.