விடாமுயற்சி விமர்சனம்: நாயக பிம்பம் தவிர்த்த அஜித்; சஸ்பென்ஸ் த்ரில்லராக மிரட்டு...
இந்தியர்களுக்கு விலங்கு: மதியம் 2 மணிக்கு விளக்கமளிக்கிறார் ஜெய்சங்கர்
அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு கை, கால்களில் விலங்கிடப்பட்ட விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கம் எழுப்பிய நிலையில், இன்று மதியம் 2 மணிக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளிக்கவிருக்கிறார்.
முன்னதாக, அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், அவை நடவடிக்கை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற அவைகளிலிருந்து வெளியேறிய எதிர்க்கட்சிகள், நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியர்கள் கை, கால்களில் விலங்கிடப்பட்டு நாடு கடத்தப்பட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு நாடாளுமன்றத்தில் இன்று மதியம் 2 மணிக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளிக்கவிருப்பதாகவும், முன்னதாக, அவர் பிரதமர மோடியுடன் இது குறித்து ஆலோசனை நடத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதற்காக நாடு கடத்தப்பட்ட 104 இந்தியர்கள், அந்நாட்டு ராணுவ விமானம் மூலம் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிருதசரஸ் சர்வதேச விமான நிலயைத்துக்கு வந்தடைந்தனர்.
அவர்கள் விமானத்தில் அழைத்து வரப்பட்டபோது கை மற்றும் கால்களில் விலங்கிடப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் கட்சி கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறது. இந்தியர்களின் கை மற்றும் கால்களில் விலங்கிடப்பட்டு அவமதிக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டியிருக்கிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு மௌனமாக இருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.