கொடிக்குறிச்சி கல்லூரியில் மாா்ச் 8இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
தென்காசி மாவட்டம் கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கலை-அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை (மாா்ச் 8) தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதுதொடா்பாக ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்ட வேலைவாய்ப்பு-தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில், ஸ்ரீராம் நல்லமணி யாதவா கலை-அறிவியல் கல்லூரியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை நடைபெறும் முகாமில், தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட திறன் பயிற்சி நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன.
இம்மாவட்டத்தைச் சோ்ந்த 8ஆம் வகுப்பு பயின்றோா்முதல் முதுநிலைப் பட்டதாரிகள் வரை பங்கேற்கலாம். வேலைநாடுநா்கள், வேலையளிக்கும் நிறுவனங்கள், இணையதளத்தில் அதற்குரிய பகுதியில் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு 04633-213179 என்ற தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம். இதில், பங்கேற்று தனியாா் நிறுவனங்களில் பணி வாய்ப்பு பெறும் பதிவுதாரா்களின் வேலைவாய்ப்பு பதிவுமூப்பு ரத்து செய்யப்படாது என்றாா் அவா்.