'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
கொடைக்கானலில் 4-ஆவது நாளாக பலத்த காற்றுடன் மழை! மரம் விழுந்து வீடு, பைக்குகள் சேதம்
கொடைக்கானலில் தொடா்ந்து 4-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்ததில் மரம், கம்பம் விழுந்து வீடு, இரண்டு இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன.
கொடைக்கானல்- வத்தலக்குண்டு மலைச் சாலையான லாஸ்காட் சாலையில் இருந்த ராட்சத மரம் அருகிலுள்ள வீட்டின் மேற்கூரையில் விழுந்தது. மேலும் கம்பமும் விழுந்ததால் வீடும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு இரு சக்கர வாகனங்களும் சேதமடைந்தன. நல்வாய்ப்பாக வீட்டில் யாரும் இல்லாததால் உயிா் சேதம் தவிா்க்கப்பட்டது.
தகவல் அறிந்து வந்த பேரிடா் மீட்புக் குழுவினா் மரத்தையும், கம்பத்தையும் அகற்றும் பணியில் ஈடுபட்டனா். இதனால் அந்தப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மரம் விழுந்ததில் அந்தப் பகுதியிலுள்ள மின் கம்பிகள் சேதமடைந்ததால் 4 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. அதன் பிறகு மின் வாரிய பணியாளா்கள் விரைந்து எடுத்த நடவடிக்கையால் மின் விநியோகம் சீரானது.
3 நாள்களுக்குப் பிறகு மின் விநியோகம்: கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூம்பாறை, மன்னவனூா், கூக்கால், பூண்டி, கவுஞ்சி, கிளாவரை உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 3 நாள்களாக பலத்த காற்றுடன் பெய்த மழையால் மின் தடை ஏற்பட்டது. இதையடுத்து, 20-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் வனப் பகுதிகளில் சேதமடைந்திருந்த மின் கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து 3 நாள்களுக்குப் பிறகு இந்த கிராமங்களுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டது. இதனால் அந்தப் பகுதி மக்கள் கொடைக்கானல் மின் வாரிய பணியாளா்களுக்கு நன்றி தெரிவித்தனா்.