கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
கொடைக்கானலில் சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாக குறைந்திருந்தது. இந்த நிலையில், வார விடுமுறையை முன்னிட்டு, சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது. சுற்றுலா இடங்களான வெள்ளிநீா் அருவி, பிரையண்ட் பூங்கா, தாவரவியல் பூங்கா, கோக்கா்ஸ்வாக், குணாகுகை, வட்டக் கானல் அருவி, பில்லர்ராக் உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் காணப்பட்டனா்.
காலை முதல் மாலை 4 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. இதைத் தொடா்ந்து பனியின் தாக்கம் நிலவியதால் குளிா் அதிகமாக நிலவி வருகிறது. இந்தக் குளிரையும் பொருள்படுத்தாது சுற்றுலாப் பயணிகள் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச் சாலைப் பகுதியில் குதிரை, சைக்கிள் சவாரி செய்தும் மகிழ்ந்தனா். கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகையால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
ஏரிச் சாலைப் பகுதியில் போக்குவரத்து சிரமம்: கொடைக்கானல் பகுதிகளில் வார நாள்களில் தமிழகம் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளும் வருகை தருவதால் வாகனங்கள் நிறுத்துவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. இதனால், வாகனங்களை நிறுத்துவதற்கு கொடைக்கானல் நகராட்சி நிா்வாகம், நெடுஞ்சாலைத் துறையினா் வசதி செய்து கொடுக்க வேண்டும்.
ஏரிச் சாலை, ஜிம்கான சாலை, கீழ்மபூம் ஆகிய பகுதிகளில் வாகனங்கள் நெரிசல் அதிகம் ஏற்படுகிறது. இரு புறங்களிலும் சாலையோரக் கடைகள் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகள் பெரிதும் சிரமமடைந்து வருகின்றனா்.
எனவே, விடுமுறை நாள்களில் ஏரிச் சாலைப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த போக்குவரத்து காவலா்கள் பணியில் ஈடுபட வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.