கொதிக்கும் எண்ணெய்யில் கையால் வடை எடுத்த பக்தா்கள்
செங்கம் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தைப்பூச விழாவில், கொதிக்கும் எண்ணெய்யில் கையால் வடை எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா்.
செங்கம் அருகே தொரப்பாடி கிராமத்தில் உள்ள ஸ்ரீபாலசுப்பிரமணியா் கோயிலில் 29-ஆம் ஆண்டு தைப்பூச விழா நடைபெற்றது. இதையொட்டி, பக்தா்கள் காப்புக் கட்டிக்கொண்டு விரதமிருந்து வந்தனா்.
இந்த நிலையில், தைப்பூச விழாவுக்காக கோயிலில் சுவாமிக்கு செவ்வாய்க்கிழமை காலை முதல் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது.
பின்னா், கோயில் வளாகத்தில் பக்தா்கள் செக் இழுத்தல், உரல் இழுத்தல், காரைமுள் மீது நடந்து செல்வது, கொதிக்கும் எண்ணெய்யில் இருந்து கையால் வடை எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து, மாலையில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வாணவேடிக்கையுடன் வீதி உலா நடைபெற்றது.
இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.