தமிழ்நாடு பெருமையுடன் கர்ஜித்தது: முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவு!
`கொலை செய்துவிட்டேன், சொல்லிவிடுங்கள்...' - மனைவியைக் கொன்று சூட்கேஸில் உடலை அடைத்த இன்ஜினீயர்
இந்தியாவில் பெங்களூரு சாஃப்ட்வேர் தலைநகரமாக விளங்குகிறது. இதனால் நாடு முழுவதும் இருந்து சாப்ட்வேர் இன்ஜினீயர்கள் பெங்களூரு வந்து வேலை செய்கின்றனர். கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு மும்பையை சேர்ந்த ராகேஷ் ராஜேந்திரா என்பவர் தனது மனைவி கெளரியுடன் பெங்களூரு வந்து ஹுலிமாவு என்ற இடத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார். ராகேஷ் சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் பிராஜெக்ட் மேலாளராக இருக்கிறார். கெளரி மாஸ் மீடியாவில் பட்டப்படிப்பு படித்துள்ளார். அவர் வேலை தேடிக்கொண்டிருந்தார். ராகேஷ் வீட்டில் இருந்துதான் வேலை செய்து வந்தார். எனவே எப்போதும் வீட்டில் இருவரும் இருப்பது வழக்கம். ராகேஷ் திடீரென தனது வீட்டு உரிமையாளருக்கு போன் செய்து, `எனது மனைவியை கொலை செய்துவிட்டேன். போலீஸாருக்கு தகவல் கொடுத்துவிடுங்கள். அதோடு எனது மனைவியின் குடும்பத்திற்கும் தகவல் கொடுத்து இறுதிச்சடங்கு செய்யச்சொல்லுங்கள்' என்று தெரிவித்தார்.

அதனை கேட்டு அதிர்ச்சியடைந்த வீட்டு உரிமையாளர் நேராக ராகேஷ் தங்கி இருக்கும் வீட்டிற்கு சென்றார். ஆனால் வீடு வெளியில் பூட்டப்பட்டு இருந்தது. உடனே இது குறித்து வீட்டு உரிமையாளர் போலீஸாரை தொடர்பு கொண்டு தகவல் கொடுத்தார். போலீஸார் விரைந்து வந்து வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு இருந்த டிராலி பேக்கை சோதித்து பார்த்தபோது கெளரி கொலை செய்யப்பட்டு உடல் உள்ளே வைக்கப்பட்டு இருந்தது. அவரது உடலை மீட்டு உடனே பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ராகேஷை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். ராகேஷ் மொபைல் போன் ஆஃப் செய்யப்படாமல் ஆனில்தான் இருந்தது.
இதையடுத்து அவர் எங்கிருக்கிறார் என்று பார்த்தபோது அவர் காரில் மும்பை நோக்கி சென்றுவிட்டு மீண்டும் புனே நோக்கி வந்து கொண்டிருப்பது தெரிய வந்தது. உடனே பெங்களூரு போலீஸார் விமானம் மூலம் புனே சென்றனர். மகாராஷ்டிரா போலீஸாரின் துணையோடு ராகேஷை புனேயில் நேற்று இரவு 9.30 மணிக்கு கைது செய்து பெங்களூரு அழைத்து வந்தனர். கொலை நடந்த 24 மணி நேரத்தில் ராகேஷ் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் புதன் கிழமை இரவு சாப்பாட்டின் போது இருவருக்கும் இடையே ஏதோ பிரச்னையில் சண்டை ஏற்பட்டுள்ளது. இச்சண்டை முற்றிய நிலையில் ராகேஷ் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து தனது மனைவியை இரண்டு அல்லது மூன்று முறை சரமாரியாக குத்தி இருக்கிறார். இதில் சம்பவ இடத்திலேயே கெளரி இறந்துவிட்டார்.
அவரை உடனே சூட்கேஸில் அடைத்து வைத்துவிட்டு தப்பி சென்றுள்ளார். இரண்டு பேருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணமாகி இருந்தது. கெளரியை கொலை செய்தது குறித்து கெளரியின் பெற்றோருக்கும் ராகேஷ் போன் செய்து தகவல் கொடுத்துள்ளார். இது குறித்து போலீஸார் கூறுகையில்,''இருவருக்கும் இடையே என்ன பிரச்னையில் சண்டை வந்தது என்று தெரியவில்லை. ராகேஷ் பேச முடியாத அளவுக்கு இன்னும் அதிர்ச்சியில் இருக்கிறார். அவரிடம் விரிவான விசாரணை நடத்தவேண்டியிருக்கிறது.
இருவருக்கும் சண்டை நடந்ததற்கு அறிகுறியாக எந்த வித சத்தமும் வரவில்லை என்று பக்கத்து வீட்டுக்காரர்கள் தெரிவித்துள்ளனர். ராகேஷ் கொலை செய்துவிட்டு காரில் மும்பை வரை சென்றுவிட்டு மீண்டும் பெங்களூரு நோக்கி வந்தபோது புனேயில் கைது செய்யப்பட்டார். அவர் ஏன் திரும்பி வந்தார் என்று தெரியவில்லை''என்று தெரிவித்தனர்.