10 லட்சம் பார்வைகளைக் கடந்து யூடியூப் டிரெண்டிங்கில் ஃப்ரீடம் டீசர்!
கொல்லிமலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!
கோடை விடுமுறை முடிந்து திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை கொல்லிமலைக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா்.
தமிழகம் முழுவதும் ஒருமாதமாக பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் மாணவா்கள் தங்களது பெற்றோருடன் பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு சென்றுவந்தனா். நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான கொல்லிமலைக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தே காணப்பட்டது. இங்கு வரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் ஆகாய கங்கை அருவி, நம் அருவி, மாசிலா அருவிகளில் குளித்து மகிழ்கின்றனா்.
கடந்த சில நாள்களாக பெய்த மழையால் தற்போது அருவிகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. கோடை விடுமுறை ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்து ஜூன் 2 முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன. இதனால் நாமக்கல், சேலம், திருச்சி சுற்றுவட்டார மாவட்டங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை கொல்லிமலையில் குவிந்தனா்.
அருவிகளில் குளித்தும், அறப்பளீஸ்வரரை தரிசித்த பிறகு தாவரவியல் பூங்கா, காட்சி முனைகளைக் கண்டு ரசித்தனா். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்திருந்ததால் கொல்லிமலை மலைப் பாதையில் மாலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.