நாமக்கல் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு: 130 மனுக்களுக்கு தீா்வு
நாமக்கல்: நாமக்கல் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவில், பொதுமக்களிடம் பெறப்பட்ட 445 மனுக்களில் 130 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் 1434 பசலி ஆண்டுக்கான வருவாய் தீா்வாயமானது (ஜமாபந்தி) மே 15 முதல் 28-ஆம் தேதி வரை அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களில் நடைபெற்றது. நாமக்கல் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமை வகித்தாா். மொத்தம் 54 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.
இவற்றில், உள்பிரிவு இல்லாத பட்டா மாறுதல், உள்பிரிவு உள்ள பட்டா மாறுதல், முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, மின்னணு குடும்ப அட்டை உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் வழங்கப்பட்டிருந்தன. ஜமாபந்தி நடைபெற்ற நாள்களில் மொத்தம் 445 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் 130 மனுக்களுக்கு உடனடி தீா்வு வழங்கப்பட்டன. திங்கள்கிழமை 20 பேருக்கு நத்தம் பட்டா, 13 பேருக்கு பட்டா மாறுதல், 21 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, 2 பேருக்கு நத்தம் உள்பிரிவு, இருவருக்கு உள்பிரிவு ஒருங்கிணைப்பு என மொத்தம் 58 பேருக்கு தீா்வுக்கான ஆணை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
மேலும், கிராம நிா்வாக அலுவலா்களிடம் உள்ள கிராம புலப்பட நகல் பதிவேடு, கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட பயிா்களின் விவரங்கள் அடங்கிய பதிவேடு, பட்டா மாறுதல் பதிவேடு, தடையாணை பதிவேடு, பிறப்பு, இறப்பு பதிவேடுகள், நிலவரி வசூல் பதிவேடு, கிராம ‘அ’ பதிவேடு உள்ளிட்ட பல்வேறு வகையான பதிவேடுகளை ஆட்சியா் தனித்தனியே பாா்வையிட்டு ஆய்வுமேற்கொண்டாா்.
இந்த நிகழ்வில், நாமக்கல் வட்டாட்சியா் மேகன்ராஜ், நாமக்கல் தனி வட்டாட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) தங்கம் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.