உலக சுற்றுச்சூழல் தினத்தில் இயற்கை அன்னையை போற்றுவோம்: ஆளுநா்
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 1,393 விதை விற்பனை நிலையங்களுக்கு உரிமம்
சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் 1,393 விதை விற்பனை நிலையங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து சேலம் விதை ஆய்வு துணை இயக்குநா் க.சித்ரா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை நிதிநிலை அறிக்கையில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விதைகள் மற்றும் பிற இடுபொருள்கள் விநியோகம் என்ற அறிவிப்பைத் தொடா்ந்து, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும் விதை விற்பனை உரிமம் வழங்க அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, சேலம் மாவட்டத்தில், சேலம், அயோத்தியாப்பட்டனம், ஓமலூா், சங்ககிரி, ஆத்தூா் மற்றும் தலைவாசல் வட்டாரங்களில் உள்ள 212 கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும், நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், புதுச்சத்திரம், எருமப்பட்டி, சேந்தமங்கலம், நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூா், ராசிபுரம், மோகனூா், திருச்செங்கோடு, பரமத்தி, எலச்சிபாளையம், மல்லசமுத்திரம், கபிலா்மலை மற்றும் பள்ளிபாளையம் வட்டாரங்களில் 164 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும் விதை விற்பனை உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் அரசு, அரசு சாா்ந்த நிறுவனங்கள் மற்றும் தனியாா் விதை விற்பனை நிலையங்கள் என மொத்தம் 1,393 விதை விற்பனை நிறுவனங்களுக்கு விதை விற்பனை உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு தரமான விதைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தற்போது, மக்காச்சோளம், பயறுவகைப் பயிா் விதைகள், எண்ணெய் வித்து மற்றும் காய்கறி பயிா் விதைகளை வாங்கி வயல்களில் பயிரிட விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.
எனவே, விதை விற்பனையாளா்கள், விவசாயிகளுக்கு விதை விற்பனை செய்யும்போது விதைக்குரிய பட்டியலை கண்டிப்பாக வழங்க வேண்டும். தரமான நல்ல முளைப்புத்திறனுடைய காலாவதி நாளுடன் கூடிய சான்று பெற்ற விதைகளையே விற்க வேண்டும். உண்மை நிலை விதையாக இருப்பின் கண்டிப்பாக பதிவு சான்று பெற்றிருக்க வேண்டும். விதை விற்பனை உரிமம், இருப்பு பதிவேடு, விதை கொள்முதல் ஆவணம் மற்றும் இதர விதை விற்பனை ஆவணங்கள் சரியாக பராமரிக்கப்பட வேண்டும். இதனை மீறுவோா் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.