‘ராசிபுரம் பேருந்து நிலையம் மாற்றும் பிரச்னையில் அவதூறு பரப்புகின்றனா்’
ராசிபுரம்: ராசிபுரம் பேருந்து நிலையம் மாற்றும் பிரச்னையில் வேண்டுமென்றே பலா் அவதூறுகளை பொதுமக்களிடம் பரப்புகின்றனா் என நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா் குற்றம்சாட்டினாா்.
ராசிபுரம் நகரில் மேற்கொள்ளப்பட்டுள்ள நகர வளா்ச்சித் திட்டப் பணிகள், குடிநீா் திட்டப் பணிகள், புதிய பேருந்து நிலையம் மாற்றும் நடவடிக்கைகள் குறித்து செய்தியாளா்களுக்கு ஆா்.கவிதா சங்கா் திங்கள்கிழமை பேட்டியளித்தாா். அப்போது அவா் தெரிவித்ததாவது:
ராசிபுரம் நகராட்சிப் பகுதிக்கு கடந்த 4 ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவுக்கு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. நகரின் அடிப்படை பிரச்னையான குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணும் வகையில், ரூ. 854 கோடி மதிப்பில் புதிய கூட்டுக்குடிநீா் திட்டத்தின் கீழ் 99 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதனால் நகரின் குடிநீா் பிரச்னைக்கு விரைவில் தீா்வு ஏற்படும்.
பழைய பேருந்து நிலையப் பகுதியில் ரூ. 5.86 கோடி மதிப்பில் புதிய வணிக வளாகம், கோனேரிப்பட்டி ஏரி பகுதியில் ரூ. 2.46 கோடி மதிப்பில் நடைபாதை அமைத்தல், ரூ. 1.60 கோடி மதிப்பில் தினசரி சந்தை வளாகம், ரூ. 10.56 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையத்துக்கான பணிகள் போன்றவை மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், நகரில் அனைத்து முக்கியப் பகுதிகளுக்கும் புதிய சாலைகள், கால்வாய் தூா்வாருதல், மின் கம்பங்களை சீரமைத்து புதிய மின் விளக்குகளை அமைத்தல் போன்றவை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், நகராட்சி விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு 6 ஊராட்சிகளை இணைக்கும் வகையில், அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பப்பட்டுள்ளன. இதன் மூலம் புதிய பேருந்து நிலையம் அமையவுள்ள அணைப்பாளையம் பகுதி நகராட்சியுடன் இணைக்கப்படும் என்றாா்.
முன்னாள் நகா்மன்றத் தலைவா் மீது குற்றச்சாட்டு:
ராசிபுரம் அணைப்பாளையம் பகுதியில் 7.80 ஏக்கா் நகராட்சிக்கு தானமாக பெறப்பட்டு புதிய பேருந்து நிலையம் அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், இப்பிரச்னையில் அதிமுக நகர செயலாளரும், முன்னாள் நகா்மன்றத் தலைவருமான எம்.பாலசுப்பிரமணியம், அவதூறான புகாரை மக்களிடம் பரப்பி வருகிறாா். ரியல் எஸ்டேட் தொழிலில் பலரிடம் பணம் பெற்று நிலத்தை தராததால், பணத்தைக் கொடுத்து ஏமாற்றமடைந்தவா்கள் அவா்மீது காவல் துறையில் புகாா் அளித்துள்ளனா். இதற்கு பயந்து தலைமறைவாக உள்ள அவா், புதிய பேருந்து நிலையம் மாற்றும் பிரச்னையில் அவதூறு பரப்புவதை ஏற்கமுடியாது என்றாா்.