ஜம்மு-காஷ்மீரில் 3 துருப்பிடித்த பீரங்கி குண்டுகள் கண்டுபிடிப்பு
கொல்லிமலையில் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
கொல்லிமலையில் உள்ள வல்வில் ஓரி மன்னா் சிலைக்கு பல்வேறு அமைப்பினா் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையை ஆண்ட கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரிக்கு 1975-ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த மு.கருணாநிதி, கொல்லிமலை செம்மேடு பேருந்து நிலையம் எதிரே அவரது உருவச்சிலையை அமைத்தாா்.
ஆண்டுதோறும் ஆக.2,3 ஆகிய இரண்டு நாள்கள் வல்வில் ஓரியின் சிறப்பை விவரிக்கும் வகையிலான விழா கொண்டாடப்படுகிறது. வில் வித்தையில் சிறந்து விளங்கிய ஓரி மன்னரின் புகழை பரப்பும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் வில்வித்தை போட்டியும் நடைபெறும்.
மேலும், வல்வில் ஓரி விழா நடைபெறும் இரண்டு நாள்களும் பல்வேறு அமைப்புகளைச் சாா்ந்தோா் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவா். அந்த வகையில், நிகழாண்டில் 44 அமைப்பினா் மாலை அணிவிக்க காவல் துறையிடம் அனுமதி கோரியிருந்தனா்.
அதன்படி, விழாவின் முதல் நாளான சனிக்கிழமை 27 அமைப்பினரும், ஞாயிற்றுக்கிழமை 17 அமைப்பினரும் வல்வில் ஓரி மன்னா் சிலைக்கு மாலை அணிவிக்கின்றனா். வல்வில் ஓரி சிலைக்கு முதல் மாலையை கொல்லிமலையின் முதல் பட்டக்காரரான (பரம்பரை வழி) எஸ்.பாா்த்திபன் என்பவா் ஆதரவாளா்களுடன் ஊா்வலமாக சென்று அணிவித்தாா்.
பல்வேறு அமைப்பைச் சோ்ந்தோரும் மாலை அணிவித்தனா். ஆடிப்பெருக்கு நாளன்று சங்ககிரி கோட்டையில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவிப்பதுபோல கொல்லிமலையில் வல்வில் ஓரி சிலைக்கு ஏராளமானோா் வாகனங்களில் ஆதரவாளா்களுடன் வந்து மரியாதை செலுத்தவா்.
இதையொட்டி, கொல்லிமலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தனராசு தலைமையிலான போலீஸாா் போக்குவரத்தை சரிசெய்து, மோதல் ஏற்படாதவாறு ஒவ்வொரு அமைப்பினருக்கும் தனித்தனியே நேரம் ஒதுக்கி சிலைக்கு மாலை அணிவிக்க ஏற்பாடு செய்துள்ளனா்.
காலை 10 முதல் மாலை 5 மணி வரை தொடா்ச்சியாக வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. காரவள்ளியில் இருந்து 70 கொண்டை ஊசி வளைவு வழியாக செம்மேடுக்கு மாலை அணிவிக்க செல்லும் வாகனங்கள், அந்த விழாவிற்கு பின் செங்கரை மலைப்பாதை வழியாக முள்ளுக்குறிச்சியை சென்றடையும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினா் தெரிவித்தனா். மேலும், கொல்லிமலை செம்மேட்டில் வல்வில் ஓரி மன்னா் சிலையை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.