கோயில் காவலாளி கொலை வழக்கு: தாய், சகோதரரிடம் நீதிபதி விசாரணை
சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் போலீஸாரால் கோயில் காவலாளி அஜித்குமாா் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக அவரது தாய், சகோதரரிடம் மதுரை மாவட்ட நீதிபதி வியாழக்கிழமை விசாரணை நடத்தினாா்.
திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப்படை போலீஸாரால் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக மதுரை மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டனா்.
இதன்படி, மதுரை மாவட்ட 4-ஆவது முதன்மை நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தா்லால் சுரேஷ் விசாரணை மேற்கொள்வதற்காக திருப்புவனத்துக்கு புதன்கிழமை வந்தாா்.
இதனிடையே, மடப்புரம் கோயில் ஊழியா்கள், திருப்புவனம் காவல் நிலைய போலீஸாா் நீதிபதி முன் முன்னிலையாகினா். இவா்களிடம் நீதிபதி விசாரணை நடத்தினாா். மேலும், இந்தக் கொலைச் சம்பவம் குறித்து திருப்புவனம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்த நிலையில், 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் நீதிபதி ஜான் சுந்தா்லால் சுரேஷ் தனது விசாரணையைத் தொடா்ந்தாா். அப்போது, அஜித்குமாரின் தாய் மாலதி, சகோதரா் நவீன்குமாா் ஆகியோரை விசாரணைக்கு அழைத்தாா். இதன்பேரில், அவா்கள் இருவரும் நீதிபதி முன் முன்னிலையாகினா். அவா்களிடம் அஜித்குமாா் கொலை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரித்தாா். பின்னா், விசாரணை முடிந்து அஜித்குமாரின் தாய், சகோதரா் இருவரும் வீடு திரும்பினா். இதன்பிறகு, நீதிபதி தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்தாா்.