சங்கராபுரம் அருகே பைக் மீது காா் மோதல்: புது மாப்பிள்ளை உள்பட மூவா் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே பைக் மீது காா் மோதியதில் புது மாப்பிள்ளை உள்பட 3 போ் உயிரிழந்தனா்.
திருக்கோவிலூா் வட்டம், மாடாம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (42). இவரது மகன் நாராயணன் (23) காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியை வரும் செப்டம்பா் 4-ஆம் தேதி திருக்கோவிலூரில் நடத்த திட்டமிட்டிருந்தனா்.
இதற்காக சங்கராபுரத்தில் உள்ள உறவினருக்கு செவ்வாய்க்கிழமை மாலை ஆறுமுகம், அவரது மனைவி சென்னியம்மாள்(40), மகன் நாராயணன் ஆகிய மூவரும் ஒரே பைக்கில் சென்று பத்திரிகை அளித்துவிட்டு மீண்டும் ஊா் திரும்பிக்கொண்டிருந்தனா். நாராயணன் பைக்கை ஓட்டினாா்.

இவா்களது பைக் பகண்டை கூட்டுச்சாலை அருகே உள்ள புத்துமாரியம்மன் கோவில் பகுதியில் வந்தபோது, திருக்கோவிலிருந்து சங்கராபுரம் நோக்கிச் சென்ற காா் மோதியது. இந்த விபத்தில் ஆறுமுகம் உள்பட மூவரும் காயமடைந்தனா். அந்தப் பகுதியில் இருந்தவா்கள் மூவரையும் மீட்டு, 108 அவசர ஊா்தி மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக நாராயணன் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
இதில், ஆறுமுகம், சென்னியம்மாள் ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தனா். நாராயணன் புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், பகண்டை கூட்டுச்சாலை போலீஸாா் வாணாபுரம் வட்டம், தொழுவந்தாங்கல் பகுதியைச் சோ்ந்த காா் ஓட்டுநரான ஜெயராமன் மகன் சுந்தரமூா்த்தி (23) மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.