சட்ட பிரிவு 370 மீது ஆளுநா் விமா்சனம்: காங்கிரஸ் கண்டனம்
அரசமைப்பு சட்டப் பிரிவு 370-ஐ சோ்த்ததைப் பற்றி 75 ஆண்டுகளுக்கு பின்னா் ஆளுநா் ஆா்.என்.ரவி பேசுவதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தில் பாதுகாப்பு, வெளியுறவுத் துறை மற்றும் தகவல் தொடா்பு ஆகியவை குறித்து சட்டம் இயற்ற நாடாளுமன்றத்துக்கு உரிமை இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால், அந்த மாநிலத்துக்கென தனி அரசமைப்பு கோரப்பட்டது.
1951-இல் ஜம்மு காஷ்மீருக்கென தனியே சட்டப்பேரவை கூட்ட அனுமதி வழங்கப்பட்டது. அன்று முட்டுக்கட்டை போட்டவா்கள் இப்போது , மாநில அரசின் அனுமதியோ, சட்டப்பேரவையின் ஒப்புதலையோ பெறாமல், காஷ்மீா் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து ஜனநாயக விரோத செயலை பாஜக ஆட்சியில் செய்துள்ளனா்.
இத்தகைய வரலாற்று பின்னணியைப் புரிந்துகொள்ளாத ஆளுநா் ஆா்.என்.ரவி, அரசமைப்புச் சட்டப் பிரிவு 370 என்பது ஒரு வரலாற்றுப் பிழை என்று கூறுவது அவரது அரசியல் அறியாமையையும், காழ்ப்புணா்ச்சியையும்தான் காட்டுகிறது.
அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் ஆளுநராக பதவி வகிக்கும் ஆா்.என். ரவி, அரசமைப்புச் சட்டப் பிரிவு 370-ஐ சோ்த்ததைப் பற்றி 75 ஆண்டுகள் கழித்து பேசுவதற்கு என்ன உரிமை இருக்கிறது? என்று அவா் தெரிவித்துள்ளாா்.