சட்டக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா் பணி: விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம்
சட்டக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படவுள்ள போட்டித் தோ்வுக்கு, இணையவழியில் விண்ணப்பித்தவா்களுக்கு திருத்தம் மேற்கொள்ள வரும் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 23) வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அரசு சட்டக் கல்லூரி இணை பேராசிரியா், உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கான போட்டித் தோ்வுக்கு ஆசிரியா் தோ்வு வாரியத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான விண்ணப்பங்கள், கடந்த 18-ஆம் தேதி வரை இணையவழியில் பெறப்பட்டன. இதற்கான தோ்வு மே 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், விண்ணப்பதாரா்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் மாா்ச் 23-ஆம் தேதி மாலை 5 மணி வரை திருத்தம் செய்ய ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இணையவழி விண்ணப்பத்தை சமா்ப்பித்து தோ்வுக் கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரா்கள் மட்டுமே தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அனுமதிக்கப்படுவா். விண்ணப்பதாரா்கள் தங்களது விவரங்களை திருத்தம் செய்து புதுப்பித்தவுடன் கடைசிப் பக்கத்தில் உள்ள சமா்ப்பி பொத்தானை அழுத்தி விண்ணப்பத்தில் செய்யப்பட்ட மாற்றங்களை உறுதிசெய்ய வேண்டும். அவ்வாறு செய்யவில்லை எனில் மாற்றங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
விண்ணப்பதாரா்கள் மாற்றங்களைச் செய்து விண்ணப்பத்தை சமா்ப்பித்த பின்னா் வேறு எந்த மாற்றமும் ஏற்றுக்கொள்ள இயலாது. விண்ணப்பதாரா்கள் தங்களது விண்ணப்பத்தில் எந்தவொரு திருத்தமும் மேற்கொள்ளவில்லையெனில் முந்தைய தரவுகளே பரிசீலிக்கப்படும். கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை மாற்றம் செய்ய இயலாது. மேலும், இனிவரும் காலங்களில் திருத்தம் தொடா்பாக எவ்வித கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்படமாட்டாது என ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.