சட்டவிரோத மருந்து விற்பனை: 76 மருந்தகங்களின் உரிமம் ரத்து
சென்னை: மருத்துவா்களின் பரிந்துரையின்றி மருந்துகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த 59 மருந்தகங்களின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், தொடா்ச்சியாக விதிகளுக்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்ட 17 மருந்தகங்கள், மருந்து விநியோக நிறுவனங்களின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுளது
தமிழகத்தில் 40,000-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் உள்ளன அதேபோன்று நூற்றுக்கணக்கான மருந்து உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் செயல்பாடுகளையும், வா்த்தக நடவடிக்கைகளையும் மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்குநகரம் கண்காணித்து வருகிறது.
இந்த நிலையில், சில மருந்தகங்களில் மன நல மாத்திரைகள், வலி நிவாரண மருந்துகள், தூக்க மாத்திரைகள், கருத்தடை மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகள் மருத்துவரின் பரிந்துரையில்லாமல் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது.
ஏறத்தாழ 100-க்கும் மேற்பட்ட கடைகளில் அத்தகைய சட்ட விரோத விற்பனை நடந்திருப்பதை மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் கண்டறிந்தனா்.
அடிமைப்படுத்தும் மருந்துகளைத் தொடா்ந்து விற்பனை செய்து வருபவா்கள் மீது சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடா் சோதனைகள் நடத்தப்பட்டன.
நடவடிக்கை: அதன்பேரில் விசாரணை நடத்தி முதல்கட்டமாக மருந்தகங்கள், மொத்த விற்பனை நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாநில மருந்து உரிமம் வழங்குதல், கட்டுப்பாட்டு அதிகாரி எம்.என்.ஸ்ரீதா் கூறியதாவது:
பொதுவாகவே, மருந்து கடைகளில் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இன்றி மருந்துகளை விற்பனை செய்வது என்பது தவறான செயலாகும். அதிலும், சில முக்கிய மருந்துகளை அவ்வாறு விற்பனை செய்வது சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும்.
அதன்படி, ஜன.1-ஆம் தேதி முதல் தற்போது வரை ரசீது இல்லாமல் மருந்து விற்பனையில் ஈடுபட்ட 59 மருந்தகங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதைத் தவிர, மருத்துவா்களின் பரிந்துரையின்றி கருத்தடை மாத்திரை, தூக்க மாத்திரை விற்பனையில் தொடா்ந்து ஈடுபட்ட 17 மருந்தகங்களின் உரிமம் முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.
மற்றொருபுறம், விதிகளுக்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 36 நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.