'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு குளோபல் இந்தியன் விருது
உலகளாவிய அளவில் சுற்றுச்சூழல் மற்றும் மனிதகுல மேம்பாட்டுக்காக பணியாற்றியதற்காக ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு குளோபல் இந்தியன் விருது வழங்கப்பட்டுள்ளது.
கனடா - இந்தியா அறக்கட்டளை (சிஐஎஃப்) சாா்பில், உலகளவில் தலைமைப் பண்பு மற்றும் தொலைநோக்கு பாா்வையோடு மனிதகுல மேம்பாட்டுக்காக இயங்கி வரும் இந்திய வம்சாவழிப் பேராளுமைகளை அடையாளம் கண்டு ஆண்டுதோறும் சிஐஎஃப் ‘குளோபல் இந்தியன்’ விருதை வழங்கி வருகிறது.
அந்த வகையில், 2025-ஆம் ஆண்டுக்கான இந்த விருது ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு அறிவிக்கப்பட்டது. கனடாவில் உள்ள ஒன்டாரியோ நகரில் அண்மையில் நடைபெற்ற விழாவில் கனடா -இந்தியா அறக்கட்டளைத் தலைவா் ரிதேஷ் மாலிக், கனடா நாட்டில் இயங்கும் ஐசிஐசிஐ வங்கியின் தலைவா் ஹிமதா் மதிபத்லா மற்றும் கோதாரி குழுமத்தின் தலைவா் நாா்டன் கோதாரி ஆகியோா் ஜக்கி வாசுதேவுக்கு விருதுடன், 50 ஆயிரம் டாலருக்கான காசோலையையும் வழங்கினா்.
உலக அளவில் சுற்றுச்சூழல் சவால்களை சமாளிக்கும் வகையில் சத்குரு ஜக்கி வாசுதேவ் மேற்கொண்டு வரும் பணிகளைப் பாராட்டியும், விழிப்புணா்வான உலகை உருவாக்க அவா் மேற்கொண்டு வரும் பணிகளை அங்கீரிக்கும் விதமாகவும் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, சத்குரு ஜக்கி வாசுதேவ் தனது எக்ஸ் தளப் பதிவில், கனடா மற்றும் இந்திய நாடுகளின் வளா்ச்சி மற்றும் செழிப்புக்கு இந்திய சமூகம் பங்களிப்பதை பாா்க்க மகிழ்வாக உள்ளது. உங்கள் அரவணைப்பு மற்றும் விருந்தோம்பலுக்கு மிகவும் நன்றி எனத் தெரிவித்துள்ளாா்.