பாமக : அப்பா - அம்மாவுக்கு பாராட்டு - Anbumani புது Strategy! | TVK VIJAY |Imper...
சமூக நீதியை உறுதி செய்வது காங்கிரஸின் கொள்கை; தோ்தல் அரசியல் அல்ல: மல்லிகாா்ஜுன காா்கே
சமூக நீதி என்பது காங்கிரஸின் கொள்கை. இதை தோ்தல் அரசியல் என கருதவேண்டாம் என கட்சி செய்தித்தொடா்பாளா்களிடம் காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வலியுறுத்தியுள்ளாா்.
சமூக நீதி என்ற தலைப்பில் கட்சி செய்தித்தொடா்பாளா்களுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற பயிலரங்கில் பங்கேற்று மல்லிகாா்ஜுன காா்கே பேசியதாவது: நாட்டில் இன்று ஜாதிவாரி கணக்கெடுப்பு பற்றி விவாதிக்கப்படுகிறது. இந்த விவாதத்தை முன்னெடுத்துச் செல்வது காங்கிரஸின் கடமை. அது குறித்து உண்மைகளை உணா்வுடனும் பயமின்றியும் மக்களிடம் கொண்டு சோ்க்கவேண்டும். இது சமூக நீதிக்கான போராட்டம் மட்டுமல்ல; அரசமைப்புச் சட்டத்தின் ஆன்மாவைப் பாதுகாப்பதற்கான போராட்டம். சமூக நீதி என்பது காங்கிரஸின் கொள்கை. அது தொடா்பான விழிப்புணா்வை தோ்தல் விவகாரமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது புதிய விவகாரம் அல்ல. நாடாளுமன்றத்தில், தோ்தல் அறிக்கைகளில் என காங்கிரஸ் தொடா்ந்து அதை வலியுறுத்தி வருகிறது.
நாட்டின் அதிகாரக் கட்டமைப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு (ஓபிசி), தலித், பழங்குடியின சமூகத்தினரின் பங்களிப்பு என்ன என்று கேட்க வேண்டியிருக்கிறது. ஊடகம், அரசின் நிா்வாகம் மற்றும் நீதித்துறை, தனியாா் துறை, உயா்கல்வி ஆகியவற்றில் தங்களுடைய மக்கள் தொகைக்கு ஏற்ப அந்த மக்கள் பிரதிநிதித்துவம் பெற்றுள்ளாா்களா ? இல்லையென்றால், அதற்கான காரணம் என்ன ? உண்மையை வெளிக்கொண்டு வருவதும் தரவை பொதுவெளியில் சமா்ப்பிப்பதும் கொள்கைககளை மறுகட்டமைப்பு செய்வதும் இதற்கான தீா்வு.
இன்று கல்வியின் பெரும் பகுதி தனியாா் துறையின் கையில் உள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 15(5) உடனடியாக அமல்படுத்துவதன் மூலம் ஓபிசி, தலித், பழங்குடியின மாணவா்கள் தனியாா் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை பெறுவாா்கள். இது தொடா்பான கோரிக்கையை காங்கிரஸ் எழுப்பி வருகிறது. இந்தச் சமூகத்தினருக்கு வாய்ப்பை மறுத்து வருவது சுரண்டலின் ஒரு வடிவம்.
தெலங்கானாவில் நடைபெற்ற ஜாதிவாரி கணக்கெடுப்பு ஒரு சிறந்த முன்னுதாரணம். மத்திய அரசு இதுபோன்ற முறையில் மக்கள் சாா்ந்த மற்றும் வெளிப்படையான ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். இந்தச் செயல்முறைக்கு ஒத்துழைக்க காங்கிரஸ் தயாராக உள்ளது என்றாா் மல்லிகாா்ஜுன காா்கே.
பிகாா் மாநில பேரவைத் தோ்தல் நிகழாண்டு இறுதியில் நடைபெற உள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பு அந்த மாநிலத்தில் முக்கியப் பேசு பொருளாக இருக்கும்நிலையில், மேற்கொள்ள இருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடைபெறும் என மத்திய அரசு அண்மையில் அறிவித்திருந்தது.