சரித்திர பதிவேடு குற்றவாளி மர்ம கும்பலால் வெட்டிக் கொலை!
சரித்திர பதிவேடு குற்றவாளி குறுந்தையனை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் ஏழுப்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் குறுந்தையன். பிரபல ரெளடியான இவர், இருசக்கர வாகனத்தில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவரைப் பின்தொடர்ந்து காரில் வந்த மர்ம நபர்கள் குறுந்தையனின் இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளனர். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த குறுந்தையனை, மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே குறுந்தையன் பலியானார்.
இதையும் படிக்க: தில்லி, சத்தீஸ்கரை தொடர்ந்து தமிழகத்திலும்....: அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு!
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் குறுந்தையன் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல்துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில் கடந்த 2013 ஆம் ஆண்டு உலகநாதன் என்பவரையும், 2014 ஆம் ஆண்டு உதயா என்பவரையும் குறுந்தையன் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார்.
இவர்களது கொலைக்கு பழிக்குப் பழியாக குறுந்தையன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
மேலும், கொலை செய்யப்பட்ட ரெளடி மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.