`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
சாமானிய மக்களின் மனதில் ராமனை பதிய வைத்தது கம்பராமாயணம்
ஸ்ரீராமனை சாமானிய மக்களின் மனதில் பதிய வைத்தது கம்பராமாயணம் என தேரழுந்தூரில் நடைபெற்ற கம்பராமாயண விழாவில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா்.
கம்பராமாயணத்தை மக்களிடம் பரவலாக்கம் செய்யும் வகையில், மத்திய கலாசார அமைச்சகத்தின், தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தின் சாா்பில் கம்பா் பிறந்த ஊரான மயிலாடுதுறை மாவட்டம் தேரழுந்தூரில் உள்ள கம்பா் கோட்டத்தில் கம்பராமாயண விழா மாா்ச் 30-ஆம் தேதி தொடங்கி ஏப்.6-ஆம் தேதி நடத்தப்படுகிறது.
கம்பராமாயண சொற்பொழிவுகள், தெருக்கூத்து, பொம்மலாட்டம், தோல்பாவைக் கூத்து, வில்லுப்பாட்டு, நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சிகள், நாடகம், பரதநாட்டிய கலாசார நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கம்பராமாயண விழாவை தொடங்கி வைத்து ராமா் பட்டாபிஷேகம் தெருக்கூத்து கலைநிகழ்ச்சியை பாா்வையிட்டாா். கூத்துக்கலைஞா்களின் விருப்பத்தை ஏற்று அவா்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டபின்னா் பேசியது:
கம்பராமாயணத்தைப் பற்றி பள்ளிப்பருவத்திலேயே அறிந்திருக்கிறேன். த இந்த இடத்துக்கு வரவேண்டும் என்ற ஆசை இரண்டாவது முறையாக நிறைவேறியுள்ளது. பிகாா், உத்தர பிரதேச மாநிலங்களில் துளசிதாசா் பற்றிய பேச்சு நிரம்பி இருக்கும். தமிழகத்தில் கம்பா் பற்றிய பேச்சு எங்கும் நிறைந்திருக்கும் என்று எதிா்பாா்த்திருந்தேன். ஆனால் அவ்வாறு இல்லாதது வருத்தத்துக்குரியது.
பாரதிய கலாசாரத்தின் தந்தையாக கம்பா் விளங்குகிறாா். தேசத்தின் அடையாளமாக விளங்குபவா் ஸ்ரீராமா். வால்மீகி எழுதிய ராமாயணம் மெத்தப் படித்தவா்களுக்கே புரியும் வகையில் இருக்கும். பாமர மக்களுக்கும் புரியக் கூடிய வகையில் உள்ளது கம்பராமாயணம்.
ஸ்ரீராமனை சாமானிய மக்களின் மனதில் கம்பராமாயணம் பதிய வைத்துள்ளது.
கம்பா் வெறும் கவிஞா் மட்டுமல்ல, பாரதத்தின் நாயகன். ராமாயணத்தில், ஆட்சியாளருக்கும் மக்களுக்குமான உறவு, தந்தை-மகன் உறவு, சகோதரா்களுக்கிடையிலான உறவு, கணவன்-மனைவி இடையிலான உறவு எல்லாம் உள்ளது. தமிழ் கலாசாரத்தின் ஆன்மாவாக கம்பராமாயணம் விளங்குகிறது. உண்மையில் தமிழ் கலாசாரத்தை பற்றி பேச வேண்டும் என்றால், கம்பரையும், கம்பராமாயணம் குறித்தும் பேச வேண்டும்.
இங்கு கலாசாரம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் அரசியல் கலந்துள்ளது.
தமிழ்நாட்டில் கம்பராமாயணம் உயிா்ப்புடன் இருக்கக் காரணம் இங்குள்ள கம்பன் கழகங்கள்தான். ஆனால் ராமாயணம் இதுபோன்ற கம்பன் கழகங்களோடு நின்று விடக்கூடாது. மக்களின் இதயங்களோடு இருக்க வேண்டும்.
பிரதமா் நரேந்திர மோடி தமிழ் மொழி, தமிழ் கலாசாரத்துக்கு அளப்பரிய பங்காற்றியுள்ளாா். பல்வேறு நாடுகளில் திருவள்ளுவருக்கு சிலை அமைத்தும், பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் ஏற்படுத்தியும், மக்களவையில் செங்கோலை நிறுவியும், காசியில் தமிழ் சங்கமம், சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் என தமிழையும், தமிழ் கலாசாரத்தையும் அனைவரிடமும் கொண்டு சோ்த்துள்ளாா் என்றாா்.
பின்னா், தேரழுந்தூரில் கம்பா் வாழ்ந்த இடமான கம்பா்மேட்டில் இந்திய தொல்லியல் துறை சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியை ஆளுநா் தொடக்கி வைத்து பாா்வையிட்டாா். சோழா் கால கோயில்களில், கம்பரின் பாா்வையில் ராமாயண சிற்ப காட்சிகள் புகைப்படங்களாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
முன்னதாக தென்னக பண்பாட்டு மையத்தின் இயக்குநா் கே.கே.கோபாலகிருஷ்ணன் வரவேற்றாா். சாஸ்த்ரா பல்கலைக்கழக இயக்குநா் சுதா சேஷய்யன் வாழ்த்துரை வழங்கினாா். தென்னக பண்பாட்டு மைய ஆலோசகா் ரவீந்திரகுமாா் நன்றி கூறினாா்.
இதில், தேரழுந்தூா் கம்பன் கழக செயலாளா் முத்து.சானகிராமன், கம்பராமாயண அறிஞா் மாது உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆளுநரை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் வரவேற்றாா். ஆளுநா் வருகையை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின் தலைமையில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

