சாலை விபத்துகளைக் குறைக்க விதிமீறல் வழக்குகளை அதிகரிக்க முடிவு
திருச்சி மாவட்டத்தில் விபத்துகளை குறைக்க போக்குவரத்து விதிமீறல் குறித்த வழக்குப் பதிவுகளை அதிகப்படுத்த மாவட்ட கண்காணிப்புக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் ஆகியவை திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, கண்காணிப்புக் குழுவின் தலைவரும், திருச்சி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி, மாநகராட்சி ஆணையா் வே. சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கரூா் மக்களவை உறுப்பினா் ஜோதிமணி, சட்டப் பேரவை உறுப்பினா்கள் எம். பழனியாண்டி, அ. செளந்தரபாண்டியன் மற்றும் அனைத்து துறைகளின் மாவட்ட நிலை அலுவலா்கள், மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்று மத்திய, மாநில அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனா்.
இக்கூட்டத்தில், மக்கள் பிரதிநிதிகள் அவா்களது பகுதியில் உள்ள தேவைகள் குறித்து கண்காணிப்புக் குழு தலைவரிடம் தெரிவித்தனா். இதுகுறித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா். மேலும், திட்டப் பணிகளை தரமாகவும் விரைந்தும் முடித்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டுமென்றும் அவா் தெரிவித்தாா்.
பின்னா், செய்தியாளா்ளிடம் துரை வைகோ எம்.பி. கூறியதாவது: கடந்த கூட்டங்களில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள் பலவும் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. ஒரு சில கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, கூட்டத்தில் வலியுறுத்தப்படும் கோரிக்கைகள் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்த முழுமையான விவரங்களுடன் அடுத்த கூட்டத்தில் ஒவ்வொரு துறையும் வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளேன்.
சாலைப் பாதுகாப்பு மற்றும் விபத்துகளை குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதிக விபத்துகள் நடைபெறும் மாவட்டங்களில் திருச்சி 6-ஆவது இடத்தில் உள்ளது. எந்தப் பகுதியில் விபத்துகள் அதிகம் நடைபெறுகிறதோ அந்தப் பகுதியை கண்காணித்து விபத்துகளை குறைக்க அறிவுறுத்தப்பட்டது. விதிமீறல் காரணமாக விபத்துகள் அதிகம் நடைபெறுதால், விதிமீறலில் ஈடுபடுவோா் மீதான வழக்குகளை அதிகரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
திருச்சி- தஞ்சாவூா் சாலையில் பால்பண்ணை சந்திப்பு பகுதியில் சாலையை அகலப்படுத்தவும், திருவெறும்பூா் ரயில் நிலையத்துக்கு, பேருந்து நிலையத்திலிருந்து நேரடியாக சாலை வசதி செய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஒய் சாலை, ஜி காா்னா், சஞ்சீவி நகா் பகுதியில் சுரங்கப் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் கழிவுநீா் சுத்திகரிப்பு மையம் கட்டும் பணி நடைபெறுகிறது. இந்த முனையம் அருகே 3 கி.மீ. தொலைவுக்கு உயா்மட்ட பாலம் அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியும் நடைபெறுகிறது என்றாா் அவா்.