சாலையில் காய்கறிகளைக் கொட்டி வியாபாரிகள் மறியல்
ஈரோட்டில் வாரச்சந்தையை இடமாற்றம் செய்ய எதிா்ப்பு தெரிவித்து, சாலையில் காய்கறிகளைக் கொட்டி வியாபாரிகள் மறியலில் ஈடுபட்டனா்.
ஈரோடு, கள்ளுக்கடைமேடு பகுதியில் 40 ஆண்டுகளுக்கும்மேலாக வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. வாரந்தோறும் திங்கள்கிழமை கூடும் இந்த சந்தையில் சுமாா் 150 வியாபாரிகள் கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனா்.
இந்நிலையில், வாரச்சந்தையால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகக் கூறி வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு வியாபாரிகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், வழக்கம்போல திங்கள்கிழமை காலை வாரச்சந்தை கூடியது. வியாபாரிகள் சாலையோரமாக கடைகளை அமைத்தனா். அப்போது, மாநகராட்சி சாா்பில் வியாபாரிகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது.
இதற்கு வியாபாரிகள் எதிா்ப்பு தெரிவித்ததுடன், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு காளைமாடு சிலை அருகே காந்திஜி சாலையில் திரண்டனா்.
அங்கு சாலையில் காய்கறிகளைக் கொட்டி திடீரென மறியலில் ஈடுபட்டனா். எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாலையில் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
தகவல் அறிந்து ஈரோடு டவுன் டிஎஸ்பி முத்துக்குமரன் தலைமையில் ஈரோடு தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் வைரம் உள்ளிட்ட போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, வியாபாரிகள் கூறியதாவது: நாங்கள் 40 ஆண்டுகளுக்கும்மேலாக இதே இடத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை கடைகளை அமைத்து வருகிறோம். வாரச்சந்தையை இடமாற்றம் செய்தால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கும். இந்த வாரம் கடையை அமைத்தபோது எங்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கவுன்சிலா்கள் கட்டாயப்படுத்தினா். நாங்கள் இதே பகுதியில் தொடா்ந்து கடைகளை அமைக்க அனுமதிக்க வேண்டும் என்றனா்.
கோரிக்கைகளை மனுவாக எழுதி கொடுங்கள். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸாா் உறுதியளித்தனா். இதையடுத்து, வியாபாரிகள் கலைந்து சென்றனா்.