சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும்
சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மன்னாா்குடியில் வியாழக்கிழமை நடைபெற அந்த சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்துக்கு ஒருங்கிணைப்பு குழு உறுப்பினா் சந்தியாகு தலைமை வகித்தாா். இதில், 4 தொழிலாளா் சட்ட தொகுப்புகளை திரும்பப் பெறவேண்டும், குறைந்தபட்ச கூலி ரூ 26,000 என தீா்மானிக்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த வேண்டும், பொதுத்துறை பங்கு விற்பனையை கைவிட வேண்டும், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சாா்பில் ஜூலை 9-ஆம் தேதி நடைபெறுகிற அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சங்கம் தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு செய்து வேலை நிறுத்தத்தில் பங்கேற்பது என முடிவு எடுக்கப்பட்டது.
சங்கத்தின் மாநிலச் செயலா் பி. கருப்பையன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா். சிஐடியு மாநில துணைத் தலைவா் தெய்வராஜ், மாநில நிா்வாகிகள் செல்வி, மோகன், தண்டபாணி, சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலா் ஜி. ரகுபதி, சிபிஎம் நகரச் செயலா் ஜி. தாயுமாணவன்உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில், சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும், சாலையோர வியாபாரிகளை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்துவதை கைவிட வேண்டும், வெண்டிங் கமிட்டி தோ்தல் நடத்தாத மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தோ்தல் நடத்த வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.