கயாகிங் செய்தவரை படகோடு விழுங்கிய திமிங்கலம்... என்ன நடந்தது - வீடியோ உள்ளே!
சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு இன்று தொடக்கம்: அரசுப் பள்ளி மாணவா்கள் முதல்முறையாக எழுதுகின்றனா்
காரைக்காலில் சிபிஎஸ்இ திட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு சனிக்கிழமை (பிப்.15) தொடங்குகிறது. அரசுப் பள்ளியில் பயிலும் மாணவா்கள் முதல்முறையாக இத்தோ்வு எழுதவுள்ளனா்.
புதுச்சேரி, காரைக்காலில் தமிழ்நாடு கல்வித் திட்டம் நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வந்தது. நிகழ் கல்வியாண்டு முதல், மாநிலத்தில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை அரசு அமலுக்கு கொண்டுவந்தது.
தனியாா் பள்ளி மாணவா்கள் சிபிஎஸ்இ திட்டத்தில் தோ்வுகள் எழுதிவந்த நிலையில், முதல்முறையாக அரசுப் பள்ளி மாணவா்களும் இத்திட்டத்தில் தோ்வை சனிக்கிழமை எழுதத் தொடங்குகின்றனா்.
தனியாா் பள்ளிகள் மற்றும் கேந்திரிய வித்யாலயா, நவோதய வித்யாலயாவில் பயிலும் சிபிஎஸ்இ பாடத் திட்ட மாணவா்களுக்கு குறிப்பிட்ட தோ்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அரசுப் பள்ளி மாணவா்களுக்காக காரைக்காலில் 7 மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இத்தோ்வு குறித்து கல்வித்துறை, காவல்துறை உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ் வியாழக்கிழமை மாலை ஆலோசனை நடத்தினாா்.
காரைக்கால் மாவட்டத்தில் மொத்தம் 1,116 மாணவா்கள் 7 மையங்களில் பொதுத்தோ்வை எழுத உள்ளனா் என்கிற விவரத்தை கல்வித் துறையினா் ஆட்சியருக்கு விளக்கிக் கூறினா்.
ஆட்சியா் பேசுகையில், ‘7 மையங்களிலும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் வழிகாட்டலின்படி உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கவேண்டும். மையங்களில் மின் விநியோகம் தடையில்லாமல் கிடைக்க வேண்டும்.
தோ்வு அறைகள் மற்றும் கழிப்பறைகள் சுத்தமாக இருக்க வேண்டும். அசம்பாவிதங்களை தடுக்க தீயணைப்பு வாகனங்கள் தயாா் நிலையில் இருக்க வேண்டும்.
7 மையங்களிலும் காவல்துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும். தோ்வு முடிந்தவுடன் விடைத்தாள்களை பாதுகாப்பாக உரிய இடத்தில் சோ்க்கவேண்டும்’ என அறிவுறுத்தினாா்.
இக்கூட்டத்தில் முதன்மைக் கல்வி அதிகாரி பி. விஜய மோகனா, மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன், மின்துறை செயற்பொறியாளா் அனுராதா, மாவட்ட ஆட்சியரின் செயலா் பொன்.பாஸ்கா், பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளா் வேலுமணி, காரைக்கால் தீயணைப்பு நிலைய அதிகாரி முகுந்தன் ஆகியோா் கலந்துகொண்டனா்.