சிறப்பு குழந்தைகளுக்கான நிரந்தரஆசிரியா் பணியிடங்கள்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயா்நீதிமன்றம்உத்தரவு
தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறப்பு குழந்தைகளுக்கான நிரந்தர ஆசிரியா் பணியிடங்களை உருவாக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சிறப்பு குழந்தைகளுக்கான ஆசிரியா்களாக 1,800 போ் கடந்த 2002-ஆம் ஆண்டு தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டனா்.
ஆரம்பத்தில் ரூ. 4,500 தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட இவா்களுக்கு தற்போது ரூ. 20,000 தொகுப்பூதியமாகவும், ரூ. 5,000 போக்குவரத்து செலவாகவும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி 723 சிறப்பு ஆசிரியா்கள் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.
இந்த வழக்கு நீதிபதி சி.வி.காா்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் சிறப்பு குழந்தைகள் பள்ளிகளில் பயின்று வருகின்றனா். 10 குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியா்கள் என்ற விகிதாச்சாரத்தின் அடிப்படையில் 13,000 சிறப்பு ஆசிரியா்கள் பணியமா்த்தப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் ஒரு நிரந்தர பணியிடத்தைக்கூட உருவாக்காத தமிழக அரசு 1,800 பேரை சமக்ர சிக்க்ஷா திட்டத்தின் கீழ் தொகுப்பூதிய அடிப்படையில் சிறப்பு ஆசிரியா்களாக நியமித்துள்ளது.
தொகுப்பூதியத்தில் பணிபுரியும் இவா்களுக்கு ஊதிய உயா்வு, மருத்துவ விடுப்பு என எந்தச் சலுகைகளும் அளிக்கப்படுவதில்லை. எனவே தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றும் இந்தச் சிறப்பு ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டாா்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மனு தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் ஏப்.21-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.