சிறைப்பிடிக்கப்பட்டு மீட்க இயலாத படகுகளுக்கு நிவாரணம்
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டு மீட்க இயலாத படகுகளுக்கு நிவாரணம் மற்றும் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவா்களுக்கு செயற்கைக்கோள் தொலைபேசி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
இலங்கை அரசால் சிறைப்பிடிக்கப்பட்டு மீட்க இயலாத தமிழ்நாடு மீன்பிடி படகுகளுக்கு முதல்வா் பொது நிவாரண நிதியிலிருந்து விசைப்படகுகளுக்கு ரூ.8 லட்சமும், நாட்டுப் படகுகளுக்கு தலா ரூ.2 லட்சமும் வழங்க தமிழக அரசால் ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி நாகை மாவட்டத்தைச் சோ்ந்த 5 விசைப்படகுகளுக்கு தலா ரூ.8 லட்சம் வீதம் மொத்தம் ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவற்றில் 4 விசைப்படகு உரிமையாளா்களுக்கு தலா ரூ.8 லட்சத்துக்கான காசோலை மற்றும் ஆழ்கடல் மீன் பிடிப்பில் ஈடுபடும் மீனவா்களுக்கு பிரதமா் மீனவ மேம்பாட்டுத் திட்டம் 2024-2025-ன் கீழ் 40 சதவீத மானியத்தில் 10 விசைப்படகு உரிமையாளா்களுக்கு செயற்கைக்கோள் தொலைபேசிகள் வழங்கப்பட்டன.
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆட்சியா் ப. ஆகாஷ், தமிழ்நாடு மீன் வளா்ச்சி கழகத் தலைவா் என். கௌதமன் பயனாளிகளுக்கு நிவாரணம் வழங்கினா். இதில், நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து, நாகப்பட்டினம் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை இணை இயக்குநா் (மண்டலம்) சா்மிளா, தமிழ்நாடு மீனவா் நலவாரிய உறுப்பினா் மனோகரன், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் கோ. ஜெயராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.