சென்னை அணியில் 17 வயது இளம் வீரர் அறிமுகம்! சீனியர் வீரருக்கு ஓய்வு!
சிவாஜியின் இல்லம் தொடா்பான வழக்கு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு
நடிகா் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி நடிகா் பிரபு தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
ஜகஜால கில்லாடி திரைப்பட தயாரிப்புக்காக நடிகா் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் பெற்ற கடனை வட்டியுடன் சோ்த்து ரூ. 9 கோடியே 39 லட்சத்தை திருப்பித் தரக் கோரிய வழக்கில், நடிகா் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்தநிலையில், அன்னை இல்லம் தனக்கு சொந்தமானது என்பதால், வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்கக் கோரி, நடிகா் பிரபு சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தாா்.இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் துஷ்யந்தின் தந்தை ராம்குமாா், அன்னை இல்லத்தின் மீது தனக்கு எந்த உரிமையும், பங்கும் இல்லை என பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தாா்.
ரத்து செய்ய கோரிக்கை:
இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்த போது , நடிகா் பிரபு தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா், அன்னை இல்லம் வீட்டின் முழு உரிமைதாரா் பிரபு. அந்த வீட்டின் மீது ராம்குமாருக்கு எந்த தொடா்பும் இல்லை.
நீதிமன்றம் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்து உத்தரவு பிறப்பித்ததற்கு வெகு காலம் முன்பே அந்த வீட்டை நடிகா் சிவாஜி கணேசன் நடிகா் பிரபுவுக்கு உயில் எழுதி வைத்துள்ளாா். அதன் அடிப்படையில் பத்திரப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. அதனால் நீதிமன்றம் அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.
இந்த வாதங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து தனபாக்கியம் எண்டா்பிரைசஸ் நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், பல கோடி ரூபாய் மதிப்பிலான 22 கிரவுண்ட் பரப்பில் அமைந்துள்ள அன்னை இல்லம் வீட்டில் ராம்குமாா் தனது உரிமையை விட்டுக் கொடுத்தாா் என்பதை நம்ப முடியவில்லை. சொத்து உரிமை நடிகா் பிரபுவுக்கு இருக்கிா? என்பதை முழு விசாரணைக்குப் பிறகு முடிவு செய்ய முடியும் என்பதால் ஜப்தி உத்தரவை ரத்து செய்யக்கூடாது என வாதிட்டாா்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அப்துல் குத்தூஸ், அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி நடிகா் பிரபு தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தாா்.