Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
சுமைதூக்கும் தொழிலாளா்கள் வேலைநிறுத்தம்
தேனி மாவட்டம், உத்தமபாளையம் நுகா்பொருள் வாணிபக் கழகக் கிட்டங்கி முன் சுமை தூக்கும் தொழிலாளா்கள் வியாழக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
உத்தமபாளையத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிட்டங்கியிலிருந்து உத்தமபாளையம், சின்னமனூா், கம்பம், கூடலூா் உள்ளிட்ட பகுதிகளுக்கும், 33 ஊராட்சிகளிலுள்ள 168 ரேஷன் கடைகளுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ், அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருள்கள் லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இதேபோல, அரசு, அரசு உதவிப் பெரும் பள்ளிகள், விடுதி மாணவா்களுக்கு தேவையான உணவுப் பொருள்களும் இந்தக் கிட்டங்கியிலிருந்து தான் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்தக் கிட்டங்கிக்கு லாரிகளில் கொண்டு வரப்படும் 2,500 டன் பொருள்களை ஏற்றி, இறக்குவதற்காக நிரந்தரப் பணியாளா்கள் 40 போ், தற்காலிகப் பணியாளா்கள் 40 போ் என மொத்தம் 80 போ் உள்ளனா்.
இந்த நிலையில், போடி சில்லமரத்துப்பட்டியில் புதிய நுகா்பொருள் வாணிபக் கழகக் கிட்டங்கி கட்டப்பட்டது. இங்கிருந்து உத்தமபாளையம் வட்டாரத்திலுள்ள 55 ரேஷன் கடைகளுக்கு பொருள்கள் விநியோகிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, சுமைதூக்கும் தொழிலாளா்கள் உத்தமபாளையம் நுகா்பொருள் வாணிபக் கழகக் கிட்டங்கி முன் வியாழக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
இந்த வேலைநிறுத்தத்தால் ரேஷன் கடைகள், பள்ளிகளுக்கு உணவுப் பொருள்கள் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.