சூறாவளி தாக்கிய அமெரிக்க மாகாணத்தில் காட்டுத் தீ! மக்கள் வெளியேற்றம்!
அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் அப்பகுதியுள்ள குடிமக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
வட கரோலினா மாகாணத்தின் போல்க் கவுண்டி, அதன் அருகிலுள்ள புர்கே மற்றும் மேடிசன் ஆகிய மூன்று கவுண்டிகளிலும் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அம்மாகாணத்தின் வட எல்லையில் விர்ஜீனியா மாகாணத்தின் அருகிலுள்ள ஸ்டோக்ஸ் கவுணிடியின் வனப்பகுதியிலும் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வட கரோலினா பொது பாதுகாப்புத் துறை நேற்று (மார்ச் 22) இரவு 8.20 மணியளவில் அம்மாகாணத்தின் மேற்கு பகுதியிலுள்ள போல்க் கவுண்டியின் குடியிருப்பு வாசிகள் வெளியேற உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அவர்களது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், காட்டுத் தீ ஏற்பட்டுள்ள பகுதிகளின் தெரிவுநிலை குறைந்து வருவதினால் அங்குள்ள மீட்புப் பாதைகள் முடக்கப்படக்கூடிய அபாயமுள்ளது எனவே அப்பகுதி குடியிருப்பு வாசிகள் உடனடியாக வெளியேறவில்லை என்றால் அங்கேயே சிக்கிக்கொண்டு உங்களது உடலுக்கும் உயிருக்கும் ஆபத்து ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிக்க: போருக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளில் வலுக்கும் போராட்டம்!
மேலும், கொலம்பஸ் பகுதியில் குடியிருப்பு வாசிகள் தங்குவதற்கு கூடாரங்கள் நிறுவப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2024 செப்டம்பரில் வட கரோலினா மாகாணத்தின் மேற்கு பகுதியில் ஹெலீன் சூறாவளி தாக்கியதில் அங்குள்ள முக்கிய நகரங்களில் கடும் வெள்ளம் ஏற்பட்டு பெரும்பாலான உள்நாட்டு பாதைகளில் 2025 மார்ச் மாதம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.
இத்துடன், அந்த சூறாவளியால் அம்மாகாணத்தின் 8,046 கி.மீ. நீளத்திற்கு உள்நாட்டு சாலைகள் சேதமடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.