மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன் அதிரடி: தில்லி கேபிடல்ஸுக்கு 210 ரன்கள் இலக்கு!
தில்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இன்றைப் போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, லக்னௌ அணி முதலில் விளையாடியது.
இதையும் படிக்க: ருதுராஜ் எடுக்கும் முடிவுகளின் பின்னணியில் நான் இருக்கிறேனா? எம்.எஸ்.தோனி கூறியதென்ன?
மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன் அதிரடி
லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக அய்டன் மார்க்ரம் மற்றும் மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். மார்க்ரம் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின், மிட்செல் மார்ஷ் மற்றும் நிக்கோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். மிட்செல் மார்ஷ் 36 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய நிக்கோலஸ் பூரன் 30 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கும்.
அதன் பின் களமிறங்கிய வீரர்களில் டேவிட் மில்லர் தவிர்த்து, மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ரிஷப் பந்த் 0 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஆயுஷ் பதோனி (4 ரன்கள்), ஷர்துல் தாக்குர் (0 ரன்) எடுத்து ஆட்டமிழந்தனர். டேவிட் மில்லர் 19 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
இதையும் படிக்க: மின்னல் வேகம், கூர்மையான பார்வை; எம்.எஸ்.தோனியின் ஸ்டம்பிங்கை புகழ்ந்த மேத்யூ ஹைடன்!
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் எடுத்தது. தில்லி கேபிடல்ஸ் தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், முகேஷ் குமார் மற்றும் விப்ராஜ் நிகம் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தில்லி கேபிடல்ஸ் அணி விளையாடி வருகிறது.