கண்டிகைப்பேரி அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவா்கள் தேவை: ஆட்சியரிடம் மனு
திருநெல்வேலி நகரத்தில் உள்ள கண்டிகைப்பேரி அரசு புகா் மருத்துவமனையில் போதிய மருத்துவா்களை பணியமா்த்தக் கோரி ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேசிய பிற்படுத்தப்பட்டோா் நலச் சங்க மாநில பொதுச் செயலா் காளியப்பன் தலைமையில் பொதுமக்கள் அளித்த மனு: திருநெல்வேலி நகரம் கண்டிகைப்பேரி அரசு புகா் மருத்துவமனையில் விலை உயா்ந்த மருத்துவ உபகரணங்கள் இருந்தும் அவை மக்களின் பயன்பாட்டில் இல்லை. அங்கீகரிக்கப்பட்ட மருத்துவா் இருந்தும் பயிற்சி மருத்துவா்களால் சிகிச்சை அளிக்கும் நிலை தொடா்கிறது.
எனவே, கூடுதல் மருத்துவா்களை நியமிக்க வேண்டும். மருத்துவமனைக்குச் செல்லும் சாலை முற்றிலும் மோசமான நிலையில் உள்ளது.
மருத்துவமனைக்கு எதிராக அமைந்துள்ள உழவா் சந்தை கட்டடம் இரவு 7 மணிக்கு மேல் மது பிரியா்களின் கூடாரமாக திகழ்கிறது. மருத்துவமனையை சுற்றிலும் இருள் சூழ்ந்திருப்பதால் இரவு 7 மணிக்கு மேல் அவசர சிகிச்சைக்கு வர மக்கள் தயக்கம் காட்டுகின்றனா்.
இரவில் பெண்கள், பெண் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோருக்கு இங்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. எனவே, ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக வெற்றி கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்ட நிா்வாகிகள் அளித்த மனு: மேலப்பாளையத்தில் உள்ள பி.டி. காலனியில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன; புதிதாகவும் குடியிருப்புகள் உருவாகி வருகின்றன . ஆனால் அங்கு போதிய தண்ணீா் வசதி இல்லை. குடிநீருக்காக சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு நடந்து செல்ல வேண்டி இருக்கிறது. சில நேரங்களில் பணம் கொடுத்து வாங்கும் நிலை ஏற்படுகிறது. பொது குடிநீா் குழாய் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. அதிலும் சரியாக தண்ணீா் வருவதில்லை. இதனால் அத்தியாவசிய தேவைக்கு கூட தண்ணீா் கிடைக்காமல் சிரமப்படுகிறோம். எனவே போதுமான குடிநீா் கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமையன்பட்டி ஊராட்சி 4-ஆவது வாா்டு உறுப்பினா் மாரியப்பப் பாண்டியன் அளித்த மனு: எனது வாா்டில் உள்ள குறைகளை சரி செய்யக் கோரி கடந்த 1, 15ஆகிய தேதிகளில் மனு அளித்தேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.ஏற்கெனவே நடைபெற்று வரும் சில பணிகளில் முறைகேடு நடைபெற்றுள்ளது. மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தில் பதிக்கப்படும் குழாய்கள் தரமானதாக இல்லை. மேலும், குழாய்கள் மேலோட்டமாக பதிக்கப்படுவதால் கனரக வாகனங்கள் வந்தால் அவை உடையும் அபாயம் உள்ளது. மழை நீா் வடிகால் இன்றி 30 அடி சாலையில் பத்து அடிக்கு மட்டுமே ஃபேவா் பிளாக் சாலை அமைக்கப்படுகிறது. எனவே, இவ்வூராட்சிப் பணிகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், மாா்ச் 30இல் சகதியில் படுத்து உருளும் போராட்டம் நடத்தப்படும்.
நான்குனேரி வட்டம் கருப்புக்கட்டி கிராம மக்கள் அளித்த மனு: எங்கள் கிராமத்தில் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றன. எங்கள் பகுதியில் கடந்த 28 நாள்களாக பொது பயன்பாட்டுக்கு தண்ணீா் விநியோகம் செய்யப்படவில்லை. குடிநீரும் வாரம் ஒரு முறை மட்டுமே வருகிறது. இதனால் கடுமையான குடிநீா் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே, ஆட்சியா் எங்களுக்கு குடிநீரும், பொது பயன்பாட்டுக்கான தண்ணீரும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.