நான் இம்பாக்ட் பிளேயர் கிடையாது; என்ன சொல்கிறார் எம்.எஸ்.தோனி?
ஐபிஎல் தொடரில் பின்பற்றப்படும் இம்பாக்ட் பிளேயர் விதி குறித்து மகேந்திர சிங் தோனி மனம் திறந்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அண்மையில் தொடங்கியது. இதுவரை 4 போட்டிகள் முடிவடைந்துள்ளன. அகமதாபாதில் இன்று நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. மும்பைக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸை சிஎஸ்கே 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இதையும் படிக்க: ருதுராஜ் எடுக்கும் முடிவுகளின் பின்னணியில் நான் இருக்கிறேனா? எம்.எஸ்.தோனி கூறியதென்ன?
மனம் திறந்த எம்.எஸ்.தோனி
இந்த ஐபிஎல் சீசனை சிஎஸ்கே வெற்றியுடன் தொடங்கியுள்ள நிலையில், அந்த அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி இம்பாக்ட் பிளேயர் விதி குறித்து பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இம்பாக்ட் பிளேயர் விதி தொடர்பாக ஜியோஸ்டாரில் எம்.எஸ்.தோனி பேசியதாவது: ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதி அறிமுகப்படுத்தப்பட்டபோது, அந்த விதி உண்மையில் தேவையற்றதாக உணர்ந்தேன். ஒரு விதத்தில் இம்பாக்ட் பிளேயர் விதி எனக்கு உதவியது. ஆனால், அதே நேரத்தில் அந்த விதி எனக்கு தேவையற்றதாகவும் இருந்தது. நான் போட்டிகளில் தொடர்ந்து விக்கெட் கீப்பிங் செய்கிறேன். நான் இம்பாக்ட் பிளேயர் கிடையாது. நான் தொடர்ந்து ஆட்டத்தில் ஈடுபட வேண்டிய அவசியமிருக்கிறது.
இதையும் படிக்க: மின்னல் வேகம், கூர்மையான பார்வை; எம்.எஸ்.தோனியின் ஸ்டம்பிங்கை புகழ்ந்த மேத்யூ ஹைடன்!
இம்பாக்ட் பிளேயர் விதியினால் அதிக ரன்கள் குவிக்க முடிவதாக நிறைய பேர் கூறுகிறார்கள். ஆனால், ஆடுகளங்களின் தன்மை மற்றும் வீரர்கள் எந்த அளவுக்கு நன்றாக விளையாடுகிறார்கள் என்பதைப் பொருத்தே அதிக ரன்கள் வருவதாக நான் நம்புகிறேன். கூடுதல் பேட்ஸ்மேனால் மட்டுமே அதிக ரன்களை அணிகள் குவிக்கின்ற எனக் கூறிவிட முடியாது. நாம் எப்படி சிந்திக்கிறோம் என்ற மனநிலையைப் பொருத்தே போட்டியில் ரன்கள் குவிப்பது அமைகிறது. கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைப்பதால், அணிகள் அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்க வேண்டும் என்ற மனநிலைக்கு வருகின்றனர் என்றார்.
இம்பாக்ட் பிளேயர் விதியை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா இருவரும் ஏற்கனவே விமர்சித்திருந்தனர். இம்பாக்ட் பிளேயர் விதி ஆல்ரவுண்டர்களின் வளர்ச்சியைத் தடுப்பதாக அவர்கள் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.